மாதிரிப் படம் pt web
இந்தியா

கேரளா: திருமணத்திற்கு முன்பே கருவுற்ற பெண்... குழந்தை இறந்ததால் ஆளற்ற இடத்தில் புதைத்த காதலன்!

Jayashree A

கேரளாவில் 22 வயது பெண்ணொருவர், தான் கருவுற்றதை வீட்டில் மறைத்து குழந்தைப்பேறு சமயத்தில் தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதில் குழந்தை இறந்ததாக தெரிகிறது. இதை மறைக்க, பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் தனது காதலனிடத்தில் ஒப்படைத்து இருக்கிறார் அப்பெண். ஆலப்புழா பகுதியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் தாமஸ் ஜோசப் (24). இவர் ராஜஸ்தானில் கேட்டரிங் படித்து வந்துள்ளார். அதே சமயம் கேரளாவைச் சேர்ந்த டோனா ஜோஜி (22) என்ற பெண்ணும் அங்கு தடய அறிவியல் படித்து வந்துள்ளார். கல்லூரி காலத்திலேயே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரின் காதலுக்கு இருவீட்டாரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என மலையாள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தானாக பிரசவம் பார்த்த பெண்

தனது பயிற்சிக்காக திருவனந்தபுரம் சென்ற ஜோஜி, தாமஸ் ஜோசப்புடனான உறவில் கருத்தரித்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை வெளியே சொன்னால் பிறர் என்ன நினைப்பர் என்று எண்ணி, சமூக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் ஜோஜி மற்றும் ஜோசப். இதனால் கருத்தரித்தை வெளி உலகுக்கே சொல்லாமல் மறைத்துள்ளனர். ஒருகட்டத்தில் கருக்கலைப்புக்கும் ஜோஜி முயன்றதாக தெரிகிறது. இருப்பினும் அதற்குள் காலம் தள்ளிப்போனதால், ஜோஜி அடிக்கடி வெளியூர் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இதன்மூலம் உடலளவில் தனக்கு நிகழும் மாற்றங்களை வீட்டினர் அறியாமல் இருக்கும்படி அவர் சமாளித்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி காலை, பனவள்ளி ஆனைமுடிச்சிரா என்ற இடத்தில் ஜோஜிக்கு பிரசவ வலி எடுத்து குழந்தை பிறந்திருக்கிறது. உடனடியாக ஜோஜி தானே குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டியுள்ளார். இருப்பினும் அடுத்தடுத்து அவருக்கு என்ன செய்வதென தெரியவில்லை என சொல்லப்படுகிறது. இன்னொருபுறம் குழந்தை அழாததால், அருகில் இருந்த வீட்டினருக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியவரவில்லை. டோனோ ஜோஜியும், அதீத சோர்வில் மயக்கமடைந்துள்ளார். நீண்ட நேரத்துக்குப் பின் கண்விழித்த அவர், குழந்தை அழாததால் இறந்துவிட்டதென நினைத்து, தனக்கு குழந்தை பிறந்த செய்தியை காதலர் தாமஸ் ஜோசப்பிடம் கூறி குழந்தையை வேறெங்காவது எடுத்துச்செல்லும்படி கூறியிருக்கிறார். இதற்காக பிறந்த அந்த பச்சிளம் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு அதை படிக்கட்டுக்கு அடியில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறார் ஜோஜி.

மருத்துவமனையில் உண்மையை ஒப்புக்கொண்ட பெண்

தாமஸ் ஜோசப்பும், தனது நண்பன் அசோக்குடன் (24 வயது) ஜோஜி வீட்டிற்கு சென்று, பிளாஸ்டிக் பையிலிருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு பிறகு ஜோஜிக்கு பயங்கர வயிற்றுவலி வரவே... அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஜோஜியின் உடல் மாற்றங்கள் மற்றும் அவரின் நடத்தைகள் மருத்துவர்களுக்கு சந்தேகத்தை கொடுக்கவே, ‘உங்கள் பெற்றோர் வந்தால்தான் சிகிச்சை’ என மருத்துவர்கள் கறார் காட்டவே, உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார் ஜோஜி. இதையடுத்து விஷயத்தின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவமனை நிர்வாகம் இச்சம்பவத்தை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது. அங்கு சென்ற போலீஸார் ஜோஜியை விசாரித்துள்ளனர்.

அப்போது ஜோஜி, குழந்தையை தாமஸ் ஜோசப்பிடம் கொடுத்து ஆதரவற்ற குழந்தைகளுக்கான அரசு இல்லத்தில் (அம்மா தொட்டில் என்ற திட்டத்தின்கீழ்) கொடுத்துவிடச் சொன்னதாக கூறியுள்ளார். ஜோசப்பிடம் விசாரிக்கையில் குழந்தை இறந்திருந்ததால், அதை ஆளில்லா பகுதியில் புதைத்துவிட்டதாக கூறியிருக்கிறார் அவர்.

காவல்துறையினர் விசாரணை

அடுத்தடுத்து வெளிவந்த இந்த அதிர்ச்சி உண்மைகள், காவல்துறையினரையே அதிரவைத்துள்ளது. ஆளில்லா பகுதியில் பச்சிளம் குழந்தையை புதைத்ததால், இது கொலையா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. தற்போதைக்கு ஜோசப் மற்றும் அவரது நண்பர் அசோக்கை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஜோஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். ஜோஜி மற்றும் ஜோசப்பின் பெற்றோர், இச்சம்பவங்கள் பற்றி எதுவுமே அறியாமல் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.