இந்தியா

“கல்விமுறையை மாற்றுங்கள்” - வீடியோ வெளியிட்டு மாணவர் தற்கொலை - கர்நாடகாவில் அதிர்ச்சி!

Sinekadhara

கர்நாடகாவின் கல்விமுறையை மாற்றியமைக்கக் கோரிக்கைவைத்து வீடியோ வெளியிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்திலுள்ள ராஜீவ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் படிப்பு படித்துவந்த 20 வயது மாணவர் ஹேமந்த் கவுடா. விடுதியில் தங்கி படித்துவந்த கவுடா திங்கட்கிழமை தனது அறையில் தற்கொலை செய்துகொண்டார். அவர் இறப்பதற்கு முன்பு 21 நொடி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், தற்போதைய கல்விமுறையில் இருக்கும் பிரச்னைகள் குறித்தும், அதை மாற்றக்கோரி கோரிக்கை விடுத்தும் பேசியுள்ளார். மேலும், தனது பெற்றோர், நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக, ஒருவரின் தொழில் அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது. ஒருவர் எந்த வேலை செய்கிறார் என்பதை எப்படி முக்கியப்படுத்த முடியும்? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும், தனது இறுதிச்சடங்கில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் கல்வி அமைச்சர் கலந்துகொள்ளவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோரிடம் கூறியிருக்கிறார். மாணவரின் இறப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.