heavy rain in Hubli pt desk
இந்தியா

கர்நாடகா: கொட்டிய கனமழை... குளிர்ந்த ஹூப்ளி – சாலையில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

webteam

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. ஆறு, அணை, குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லை, இதனால் மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்படும் நிலவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியில வர முடியாத சூழல் நிலவியது.

கர்நாடகாவில் கனமழை

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மாலை நேரங்களில் பெங்களூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து கர்நாடகாவின் பல மாவட்டங்களில் நேற்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை முதலே ஹூப்ளி, தார்வாட், சிக்கமங்களூர், விஜயபுர உள்ளிட்ட பகுதிகளில் வெயில் வாட்டிவதைத்த நிலையில், மாலை நேரத்தில் திடீரென கனமழை பெய்தது, இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக ஹூப்ளியில் ஒருமணி நேரம் இடி மின்னலுடன், கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பெரும்பாலான சாலைகள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது, கடைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் மூன்று அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல பகுதிகளில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன.

Auto

இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெயில் வாட்டி வதைத்த நிலையில், மழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் மற்றொருபுறம் மக்கள் பெரும் இன்னலுக்கும் ஆளாக்கியுள்ளனர். ஒருமணி நேரம் பெய்த மிக கனமழை மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது.