சித்தராமையா எக்ஸ் தளம்
இந்தியா

முடா விவகாரம்|“சித்தராமையா மீது நடவடிக்கைஎடுக்க தடையில்லை” நீதிமன்ற உத்தரவால் சூடான கர்நாடக அரசியல்!

Prakash J

மைசூருவில் மாற்று நிலம் ஒதுக்குவதில் பெரிய அளவிலான ஊழலில் மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் (முடா) ஈடுபட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கும் மாற்று நிலம் ஒதுக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணையம் (Mysuru Urban Development Authority (MUDA) ), சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை எடுத்துக்கொண்டு நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியது. இந்த இடம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அரசுக்கு 4,000 கோடி ரூபாய் இழப்பு என்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

முதலமைச்சர் சித்தராமையா

இந்த முடா முறைகேடு குறித்து, முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் முதல்வர் மீது வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி அளித்தார். ஆளுநரின் ஒப்புதலுக்கு எதிராக சித்தராமையா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்த வழக்கு முதல்முறையாக விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கூறியது. தொடர்ந்து வழக்கின் இன்றைய விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் செயல்பாடுகளில் எந்த தவறும் இல்லை என தெரிவித்த நீதிபதி, விசாரணைக்கு அனுமதி அளித்தது அவரது தனிப்பட்ட முடிவு என்பதால் அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கூறினார்.

இதையும் படிக்க: 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள்! அரசியலில் கிளம்பிய புயலையடுத்து ’திருப்பதி லட்டு’ அமோக விற்பனை!

இதையடுத்து, முதல்வர் சித்தராமையாவின் வீட்டிற்கு துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் சென்று ஆலோசனை நடத்தினர். மேலும் நீதிமன்ற உத்தரவினால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வீட்டின் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மறுபுறம், சித்தராமையா உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். தவிர, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, முடா ஊழல் வழக்கு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து முதல்வர் சித்தராமையா, “நீதிமன்றத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. உண்மை வெளிவரும். எனக்கு ஆதரவாக கட்சியினர் அனைவரும் உள்ளனர். பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் எனக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. சட்டத்தின்கீழ் இதுபோன்ற விசாரணை அனுமதிக்கப்படுகிறதா, இல்லையா என்பது குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவேன். விசாரணை 17Aஇன்கீழ் ரத்து செய்யப்படும் என்று நான் நம்புகிறேன். ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நான் செயல்படுத்திய திட்டங்களை எதிர்த்த தலைவர்கள்தான் (இன்று) என்னை ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Shivakumar & Siddaramaiah

இந்த விவகாரத்தில், சித்தராமையாவின் அமைச்சரவை சகாக்களான பிரியங்க் கார்கே மற்றும் ராமலிங்க ரெட்டி ஆகியோர் ஆதரவு தெரிவித்திருப்பதுடன், ”சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர், 100 சதவீதம் தூய்மையான முதல்வர்” எனத் தெரிவித்துள்ளனர். அதுபோல் மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும், அவருக்கு ஆதரவாக நிற்போம் என உறுதியளித்துள்ளார்.

இதையும் படிக்க: