இந்தியா

கணவரின் தம்பியை திருமணம் செய்து வைக்க முயற்சி : காவல்துறையை நாடும் சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி

webteam

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர் குருவின் குடும்பத்தில் பண விவகாரத்தால் பிளவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில், கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த குரு என்ற வீரரும் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குருவின் மனைவி கலாவதி, தானும் ராணுவத்தில் சேர விரும்புவதாகவும் தனது கணவர் ராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிய விரும்பினார் எனவும் குறிப்பிட்டிருந்தார். அவரது கனவை நிறைவேற்றும் வகையில், தான் ராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகள் சேவை ஆற்ற விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, கலாவதிக்கு அரசாங்க வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து வீரர் குருவின் இறுதி சடங்கில் பங்கேற்ற குமாரசாமியின் மகன் நிகில், போக்குவரத்து துறை அமைச்சர் டி.சி.தமன்னாவிடம் கலாவதியை அரசு வேலைக்கு அமர்த்துவதை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

மேலும் குருவின் குடும்பம் தங்கியிருக்கும் குடிகெரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள தொடரசினகேர் என்ற இடத்தில் அரை ஏக்கர் நிலத்தை வழங்குவதாக மறைந்த நடிகர் மற்றும் அரசியல்வாதி எம். ஹெச். அம்பரீஷ் மனைவி சுமலதா வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த குருவின் குடும்பத்தில் பண விவகாரத்தால் பிளவு ஏற்பட்டுள்ளது. வீரரின் மனைவி கலாவதி மாண்டியா போலீசாரின் உதவியை நாடியுள்ளார். தனது கணவரின் தம்பியை திருமணம் செய்து கொள்ளுமாறு தனக்கு அழுத்தம் தரப்படுவதாக தெரிவித்துள்ளார். 

அனைத்து துறைகளிலிருந்தும் மக்களிடமிருந்தும் வந்த நன்கொடைகள், மாநில அரசு மற்றும் ராணுவத்தினர் இழப்பீடு ஆகியவையே குடும்ப பிரச்சனைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இது குடும்ப பிரச்னை. சட்டத்தை மீறும் வகையில் பிரச்னை இருந்தால் சட்டம் தன் கடைமையை செய்யும்” எனத் தெரிவித்தனர்.