இந்தியா

ஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு 

ஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு 

webteam

ஏற்கெனவே விசாரணை முடிவுற்ற நிலையில் தற்போது காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என ப.சிதம்பரம் தரப்பு தெரிவித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, காலை 10 மணியளவில் சிபிஐ துணை ஆய்வாளர் ஆர்.பார்த்தசாரதி தலைமையிலான அதிகாரிகள், ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் 305 கோடி ரூபாய் முதலீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணையை தொடங்கினர். 

இந்நிலையில் சிபிஐ அதிகாரிகள் ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ புகார் தெரிவித்தது. மேலும் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஜாமினில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை எனவும் சிபிஐ தரப்பு வாதாடியது. அதனால் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் எனவும் இந்த வழக்கு தொடர்பான கூட்டு சதியில் ப.சிதம்பரத்திற்கு முக்கிய பங்கு உண்டு எனவும் சிபிஐ கோரியது. 

இதையடுத்து தனது வாதத்தை தொடங்கிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு ஏற்கெனவே ஜாமின் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும் ஏற்கெனவே விசாரணை முடிவுற்ற நிலையில் தற்போது காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சம்மன் அளிக்கப்பட்டபோதெல்லாம் சிபிஐ, அமலாக்கத்துறையினரிடம் சிதம்பரம் ஆஜரானார் எனவும் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளையே மீண்டும் கேட்டுள்ளனர் எனவும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசின் 6 செயலாளர்கள் கைது செய்யப்படவில்லை எனவும் கபில் சிபல் வாதாடி வருகிறார். அந்நிய முதலீட்டிற்கு பரிந்துரை செய்ததும் அந்த அரசின் 6 செயலாளர்கள்தான் என சிதம்பரம் தரப்பு கூறியுள்ளது.