நடிகர் தர்ஷன் எக்ஸ் தளம்
இந்தியா

நடிகர் தர்ஷனுக்கு கைதி எண் 6106.. டாட்டூ போடும் ரசிகர்கள்.. ஆதரவு தெரிவிக்கும் நடிகைகள்!

Prakash J

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டவர்களுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நீதிமன்றக் காவல் ஜூலை 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திவரும் விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்தப்படி உள்ளன. இதற்கிடையே, “பவித்ரா என்னுடைய கணவரின் தோழி என்பதுதான் உண்மை. அவர் மனைவி அல்ல. நான் மட்டும்தான் சட்டப்பூர்வமாக தர்ஷனை திருமணம் செய்துகொண்டேன்” என அவரது மனைவி விஜயலட்சுமி பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ரேணுகாசாமி கொலை வழக்கு கன்னட திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகைகள் யமுனா ஸ்ரீநிதி, காவ்யா கவுடா, அனுஷா ராய் உள்ளிட்ட சிலர் நடிகர் தர்ஷனுக்கு தனது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

இதையும் படிக்க: ”இந்து மதத்தை ராகுல் அவமதிக்கவில்லை” - மக்களவையில் ஆற்றிய உரை குறித்து அவிமுக்தேஷ்வர்னந்த் சரஸ்வதி!

அந்தப் பட்டியலில் தற்போது மூத்த நடிகையும் மாண்டியா முன்னாள் எம்பியுமான சுமலதா அம்பரீஷும் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர், “தர்ஷன் ஸ்டார் ஆவதற்கு முன்பே 25 வருடங்களாக அவரை நான் அறிவேன். தர்ஷன் எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர். அவர் எனக்கு ஒரு மகனைப் போன்றவர். அவர் எப்போதும் அம்பரீஷை அவரது தந்தை என்று குறிப்பிட்டார். எந்த தாயும் தன் மகனை இப்படிப்பட்ட நிலையில் பார்க்க விரும்புவதில்லை.

தர்ஷனை அன்பான மற்றும் தாராள இதயம் கொண்ட ஒரு மனிதராக நான் அறிவேன். விலங்குகள் மீது அவர் கொண்டிருந்த இரக்கமும், தேவைப்படுபவர்களுக்கு உதவ அவர் தயாராக இருப்பதும் அவரது குணாதிசயத்திற்குச் சான்றாகும். தர்ஷன் அப்படிப்பட்ட குற்றத்தைச் செய்யும் நபர் அல்ல என்று நான் நம்புகிறேன். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால், இது குறித்து தற்போது கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனுக்கு '6106' என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. தர்ஷனின் ரசிகர்கள் பலரும் இந்த எண்ணை டாட்டூவாக குத்திக்கொண்டும் வாகனங்களில் ஸ்டிக்கர்களாக ஒட்டிக்கொண்டும் இருக்கின்றனர். இதுகுறித்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதையும் படிக்க: ’அப்படி சொன்னால் அவர் என் தாயே இல்லை’ ’நான் காலிஸ்தான் ஆதரவாளர்தான்’- அம்ரித்பால் சிங் எம்.பி பதில்!

குறிப்பாக, பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு, இந்த எண் கொண்ட உடையை அணிவித்து தம்பதியினர் ஒருவர் போட்டோ ஷூட் நடத்தி இருக்கின்றனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இது ஒரு தவறான முன்னுதாரணம் என்றும், இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கர்நாடக மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தி இருக்கிறது.

குழந்தையை சிறைச் சீருடை அணியச் செய்வதும், கைவிலங்குகள் மற்றும் பிற சிறைக் குறிப்புகள் அடங்கிய அமைப்பில் புகைப்படம் எடுப்பதும் சிறார் நீதிச் சட்டத்தின் தெளிவான மீறல் என்பதால் சட்டப்பூர்வமாகக் கையாளப்பட வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுஒருபுறமிருக்க, மறுபுறம் அவருடைய உடல் எடை குறைந்திருப்பதாகவும் அவரது உடல் எடை தொடர்ந்து சிறை நிர்வாகத்தால் கவனிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்குள் அவர் 10 கிலோ எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவப் பரிசோதனையின் போது 107 கி.கி. உடல் பருமனாக இருந்த நடிகர் தர்ஷன், தற்போது 10 கிலோ எடையை குறைத்துள்ளார். அதாவது 97 கிலோவாகக் குறைந்துள்ளதால், நடிகர் தர்ஷனின் உடல்நிலையை சிறைத்துறை அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். மேலும், அவர் வழக்கமான உடல்நிலை பரிசோதனைக்குச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: ஒரு போட்டி கூட விளையாடாத வீரர்களுக்கும் ரூ.5 கோடி| ரூ.125 கோடி பரிசுத் தொகை-யார், யாருக்கு எவ்வளவு?