இந்தியா

வயிற்று வலி என சென்ற ஆண்கள்.. கர்ப்ப பரிசோதனைக்கு பரிந்துரைத்த அரசு மருத்துவர்..! 

webteam

வயிற்று வலி என்று மருத்துவரிடம் சென்ற இரண்டு ஆண்களுக்கு, மருத்துவர் கர்ப்ப பரிசோதனை செய்ய பரிந்துரைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கோபால் கஞ்சு மற்றும் காமேஸ்வர் ஜான்ஹூ. இவர்கள் இருவரும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதற்காக சிகிச்சை பெற இவர்கள், அப்பகுதியின் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்குப் பணியிலிருந்த மருத்துவர் முகேஷ் குமார், இருவரையும் கர்ப்பத்தை உறுதி செய்யும் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத்தொடர்ந்து இருவரும் மருத்துவர் முகேஷ் மீது சத்ரா மாவட்ட அரசு மருத்துவமனையின் மூத்த மருத்துவரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் பெண் ஒருவர் வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு சென்ற போது அவருக்கு கருத்தடை சாதனத்தை மருத்துவர் பரிந்துரைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.