நிஷிகாந்த் துபே x page
இந்தியா

“இந்துக்கள் காணாமல் போவார்கள்” - மேற்கு வங்க பகுதிகளை யூனியன் பிரதேசமாக்க பாஜக எம்பி வலியுறுத்தல்!

Prakash J

ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்பியாக இருப்பவர் நிஷிகாந்த் துபே. இவர், நேற்று மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தின்போது பேசினார். அப்போது பேசிய அவர், “ஜார்க்கண்டில் பழங்குடியின மக்கள்தொகை 10 சதவீதம் குறைந்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வுகாண மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வங்காளதேசத்தில் இருந்துவரும் ஊடுருவல்காரர்களால், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உள்ளூர்மக்களின் எண்ணிக்கை குறைந்தவண்ணம் உள்ளது. வங்காளதேசத்தில் இருந்து வருவபர்கள், பழங்குடியின சமூகங்கள் அதிகம் வாழும் பகுதிகளில் குடியேறுகின்றனர்.

மேலும், பழங்குடியின பெண்களை அவர்கள் திருமணம் செய்துகொள்வதால், இந்து மதத்தினர் வாழும் கிராமங்கள் முற்றிலுமாக காலியாகும் சூழல் உள்ளது. தவிர, அவர்கள் தேர்தல்களிலும் போட்டியிடுகின்றனர். இது மிகவும் தீவிரமான விஷயம். நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் எனது பதவியைகூட, ராஜினாமா செய்துவிடுகிறேன்.

BJP MP Nishikant Dubey

வங்கதேசத்தினர் நாட்டுக்குள் நுழையும் பகுதிகளான மேற்கு வங்கத்தில் உள்ள மால்டா, முருஷிதாபாத் மாவட்டங்களையும், பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச், ஆராரியா, கதிஹார் மாவட்டங்களையும், ஜார்கண்ட் பகுதிகளையும் பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும். இதைச் செய்யவில்லை என்றால் இந்துக்கள் மறைந்துபோவார்கள். மேலும் வெளிநாட்டினர் ஊடுருவலைத் தடுக்கும் தேசிய குடிமைகள் பதிவேடான NRC யை நாட்டில் அமல்படுத்த வேண்டும்” என்றார். இது அரசியல் வட்டாரத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: அதிபர் தேர்தல் | கருத்துக்கணிப்பில் ட்ரம்பை முந்திய கமலா ஹாரீஸ்.. பரபரக்கும் அமெரிக்க அரசியல் களம்!