இந்தியா

மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை ! இருவர் கைது

webteam

ஜார்கண்ட் மாநிலத்தில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்து பிளாஸ்டிக் பையில் போடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஜார்கண்ட் மாநிலத்தின் டாடா நகர் ரயில்வே நிலையத்தின் நடைமேடையில் மூன்று வயது சிறுமியும் அவரது தாயும் கடந்த வெள்ளிக்கிழமை தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அக்குழந்தையை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அக்குழந்தையின் உடலை ரயில்வே நிலையத்திற்கு அருகிலுள்ள புதரில் பிளாஸ்டிக் பையில் வைத்து வீசியுள்ளனர். 

இதனையடுத்து அக்குழந்தையின் தாய் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். காவல்துறையினர் ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தப் போது அக்குழந்தையை இரண்டு நபர்கள் தூக்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வைத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏற்கெனவே பாலியல் குற்றங்களில் தொடர்புடைய ரிங்கு சாகு இதில் சம்பந்தப்பட்டது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரிங்கு சாகுவை பிடித்து விசாரித்ததில், அவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து உடல் தூக்கி போட்டதை ஒப்புக்கொண்டார். அவர் கூறிய தகவலை வைத்து காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டனர். எனினும் குழந்தையின் தலை மட்டும் கிடைக்கவில்லை. ஆகவே மோப்ப நாய் உதவியுடன் அக்குழந்தையின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ரிங்கு சாகு மற்றும் அவருக்கு உதவிய மற்றொரு நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.