இந்தியா

“காஷ்மீரில் சட்டப் பேரவை தேர்தலை ஏன் நடத்தவில்லை” - உள்துறை விளக்கம்

“காஷ்மீரில் சட்டப் பேரவை தேர்தலை ஏன் நடத்தவில்லை” - உள்துறை விளக்கம்

webteam

ஜம்மு- காஷ்மீரில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப் பேரவை தேர்தலை சேர்த்து நடத்தாததற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர பிரதேசம், ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களின் சட்டப் பேரவை தேர்தல்களும் சேர்ந்து நடைபெறவுள்ளது. இப்பட்டியலில் தற்போது குடியரசு தலைவர் ஆட்சியிலுள்ள ஜம்மு- காஷ்மீர் மாநிலம் இடம் பெறவில்லை. கடந்த 4ஆம் தேதி தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலுள்ள கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப் பேரவை தேர்தலை இணந்து நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் தற்போது அவ்வாறு நடைபெறாததால் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திலுள்ள அரசியல் கட்சிகள் பெரும் அதிருப்தியில் உள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுடன் ஜம்மு- காஷ்மீரின் சட்டப்பேரவை தேர்தலை சேர்த்து நடத்தாததற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. அதில் “ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவை தேர்தலை நடத்த 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை ராணுவப் படை பாதுகாப்பு தேவைப்படுகிறது. அதாவது 717 கம்பெனி ராணுவப் படை தேவைப்படும். அத்தகைய அளவு துணை ராணுவப் படையை ஒரே மாநிலத்திற்கு கொடுத்துவிட்டால் மற்ற மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது கடினம். எனவே நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும்” எனத் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் மேஹபூபா முஃப்தி தலைமையிலான அரசு கடந்த 2018 ஜூன் 19 தேதி பெரும்பான்மை இல்லாததால் கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலில் இருந்தது. அதன்பின்னர் 2018 டிசம்பர் மாதம் 19 ஜனாதிபதி ஆட்சி ஜம்மு- காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டது. இந்த ஜனாதிபதி ஆட்சியின் ஆறு மாத காலம் வரும் ஜூன் மாதத்தில் முடிவடையவுள்ளதால் அதற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது  குறிப்பிடத்தக்கது.