இந்தியா

மனைவி புத்தாடை வாங்கித் தராததால் கணவன் கூறிய முத்தலாக் !

webteam

உத்தரப்பிரதேசத்தில் புதிய ஆடை வாங்கி தர மறுத்ததால் மனைவிக்கு சிறையிலிருக்கும் கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவருடைய கணவர் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையிலிருக்கும் கணவர் தனக்கு பக்ரீத் பண்டிகைக்காக புதிய ஆடை எடுத்து வரும்படி மனைவியிடம் கூறியுள்ளார். எனினும் இந்தப் பெண்ணால் கணவருக்கு புதிய ஆடை வாங்கி செல்ல முடியவில்லை. இதனைத் தொடர்ந்து இந்தப் பெண்ணிற்கு அவருடைய கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண், “எனக்கும் சிறையிலுள்ள என்னுடைய கணவருக்கும் புதிய ஆடை வாங்குவது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. என்னுடைய கணவர் பக்ரீத் பண்டிகைக்கு புதிய ஆடை வாங்கி வருமாறு கூறினார். ஆனால் என்னிடம் போதிய பணம் இல்லாததால் அவருக்கு புதிய ஆடை வாங்கி தர முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அவரை சந்திக்க சென்ற போது அவர் எனக்கு முத்தலாக் கூறினார். என்னுடைய உறவினர்களை அழைத்து சென்ற போதும் அவர் எனக்கு மீண்டும் முத்தலாக் கூறினார். 

இதனையடுத்து நான் எனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள்  எனது கணவர் மீது இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்” எனத் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பெண்களின் திருமணத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்தது. இச்சட்டம் இயற்றிய பிறகு பதிவு செய்யப்படும் 8ஆவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.