இந்தியா

500 கோடியில் மகளுக்கு சொகுசு மாளிகை - அம்பானி திருமணப் பரிசு

500 கோடியில் மகளுக்கு சொகுசு மாளிகை - அம்பானி திருமணப் பரிசு

webteam

தனது மகள் இஷாவுக்கு திருமண பரிசாக முகேஷ் அம்பானி வழங்கிய ரூ.500 கோடி மதிப்புள்ள மாளிகையை ஏராளமானோர் வந்து வியந்து பார்த்து செல்கின்றனர்.

தொழிலதிபரும் நாட்டின் முதல் பெரும் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷாவின் திருமண விழா விமரிசையாக நடைபெற்றது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் பிரமாண்டமான சொகுசு மாளிகையான அன்டில்லாவில் திருமண நிகழ்வுகள் கலைக்கட்டின. 

மணமக்கள் இஷா மற்றும் ஆனந்த் பிரமாலையை, அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளின்டன், பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக் கான், ஆமிர் கான் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னாவிஸ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு வாழ்த்தினர். 

மேலும் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டிலிருந்து அரசியல் தலைவர்கள், தொழில் துறையினர், திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். 
 
இந்நிலையில் தமது மகள் இஷாவுக்கு முகேஷ் அம்பானி கொடுத்த திருமண பரிசுதான் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறி உள்ளது. பிரம்மாண்ட சொகுசு மாளிகையை தனது மகளுக்கு திருமண பரிசாக முகேஷ் அம்பானி வழங்கியுள்ளார். மும்பையின் வோர்லி கடற்கரை சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ள இம்மாளிகை சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 ஆயிரம்‌ சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 

மாளிகைக்கு பயன்படுத்தப்பட்ட அலங்கார பொருட்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வைர இழைகளால் அலங்கரிக்கப்பட்ட தனிஅறை, மிகப்பெரிய பூஜை அறை, நீச்சல் குளம், ஒவ்வொரு தளத்தும் தனித்தனி பெரிய சாப்பிடும் இடங்கள், எல்லா தளத்திலும் தனித்தனியான ஆடை அலங்காரத்துக்கான அறைகள், பணியாற்றும் பணியாளர்களுக்காகவே தனித்தனி தங்கிமிடம் என மிகப்பெரிய மாளிகை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர விடுதிக்கு இணையாக கட்டப்பட்டுள்ள இந்த 5 அடுக்கு வீடு அரபிக்கடலை நோக்கி முகப்பாக கட்டப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான கட்டுமான தொழிலாளர்கள் இரவு பகலாக இந்த மாளிகையை கட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.