நையாப் சிங் சைனி pt web
இந்தியா

ஹரியானாவில் சிக்கலுக்கு உள்ளாகிறதா பாஜக ஆட்சி? ஆதரவை திரும்பப் பெற்ற சுயேட்சைகள்!

PT WEB

செய்தியாளர் நிரஞ்சன்குமார்

ஹரியானா சட்டப்பேரவையில் மொத்தம் 90 இடங்கள் உள்ள நிலையில் தற்போது 88 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏவான ரஞ்சித் சவுதாலா ஆகியோர் தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சட்டசபையில் பெரும்பானமை என்பது 45 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்நிலையில், 40 உறுப்பினர் பலம் கொண்ட பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளித்துவந்த சோம்பீர் சங்வான்(Sombir Sangwan), ரந்தீர் சிங் கோலன் (Randhir Singh Gollen), தரம் பால் கோன்டர் (Dharampal Gonder) ஆகிய மூன்று சுயேச்சைகள் திடீரென தங்கள் ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். மேலும் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர். இதனால் தேவையான பெரும்பான்மையை பாரதிய ஜனதா கட்சி இழந்துள்ளதாக குழப்பம் நிலவுகிறது. அதேசமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 30 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹரியானா முதலமைச்சர் சைனி, காங்கிரஸ் கட்சி குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பதாகவும் அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அண்மையில் பிரிந்த ஜன ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், பாரதிய ஜனதாவுக்கு எதிராக வாக்களிக்கப்போவதாகவும், தேவைப்பட்டால் எதிர்க்கட்சித் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடாவிற்கு வெளியிலிருந்து ஆதரவு தரப்போவதாகவும் கூறியுள்ளார். தார்மீக அடிப்படையில் சைனி பதவி விலக வேண்டும் என்றும் சவுதாலா தெரிவித்துள்ளார்.

சவுதாலா

இக்கட்சிக்கு 10 உறுப்பினர்கள் இருப்பதால் இவரது ஆதரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் சைனி தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற நிலையில், ஆறு மாதத்திற்குள்ளாக மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடியாது என்ற நிலை உள்ளது.

தற்போது மக்களவைத்தேர்தல் நடந்துவரும் நிலையில், ஹரியானாவில் மே 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதேசமயத்தில் ஹரியானா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.