அஜித் தோவல் முகநூல்
இந்தியா

சினிமாவை மிஞ்சும் சாகசம்! இந்தியாவின் 'ஜேம்ஸ் பாண்ட்' அஜித் தோவல் - மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி?

PT WEB

- சேஷகிரி

திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்டின் சாகசங்களை பார்த்தாலே மெய் சிலிர்க்கும்...ஆனால் ஜேம்ஸ் பாண்ட் என்பது கற்பனை கதாபாத்திரம்தான்.. அதே போன்று நிஜ வாழ்க்கையிலும் ஒரு சாகசக்காரர் உண்டு. அதுவும் இந்தியாவில்....நம்ப முடிகிறதா...அந்த சாகசக்காரர்தான் அஜித் தோவல்.

எல்லையில் எதிரிகள் தாக்குதல் அபாயமா? பயங்கரவாத பிரச்னையா? என எந்த சிக்கலென்றாலும் அதை கச்சிதமாக முடித்து வைக்கும் மூளைக்காரர் அஜித் தோவல். ஐபிஎஸ் அதிகாரியான இவர் RAW எனப்படும் இந்திய உளவுத்துறையின் தூணாக திகழ்ந்தவர். ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்ற சினிமா வசனம் இவருக்கு 100% பொருந்தும்.

பாகிஸ்தானுக்குள் 7 ஆண்டுகள் மாறுவேடத்தில் மறைந்திருந்து அங்கு செயல்படும் பயங்கரவாதிகள் குறித்த அனைத்து தகவல்களையும் சாதுர்யமாக சேகரித்தது இவரது முரட்டு தைரியத்திற்கு ஓர் உதாரணம். இது மட்டுமல்ல...சீனாவிலும் மியன்மாரிலும் கூட மறைந்திருந்து சில செயல்களை இவர் செய்ததாக தகவல்கள் உண்டு. ஆனால் உளவுத்துறை தொடர்புள்ளவர் என்பதால் தோவலின் பல சாகசங்கள் வெளியே தெரியாத நிலை இருக்கிறது. யாரால் சிக்கலோ அவர்களுக்கு மறைமுகமாக நெருக்கடிகளை உண்டாக்கி சாமர்த்தியமாக பேசி நிலையை நம் நாட்டுக்கு சாதகமாக மாற்றுவதில் கில்லாடி இவர்.

சிக்கிம் இந்தியாவுடன் இணைந்ததில் தோவலுக்கு முக்கிய பங்கு உண்டு என்றும் கூறப்படுகிறது. 1999இல் ஆப்கானிஸ்தானுக்கு இந்திய விமானம் கடத்திச்செல்லப்பட்டபோது பயணிகளை பத்திரமாக மீட்டு வந்ததில் அஜித் தோவலுக்கும் பங்கு உண்டு. பாகிஸ்தான், சீனா எல்லைகளில் ஊடுருவல் உள்ளிட்ட சிக்கலான சூழல்களை சமாளிப்பதிலும் அஜித் தோவலுக்கு நீண்ட அனுபவங்கள் உண்டு. 2016இல் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், 2019இல் பாலாகோட் தாக்குதல்களை செயல்படுத்தியதன் பின்னணியில் இருந்த மாஸ்டர் மைண்டு அஜித் தோவல்தான்.

உளவு அதிகாரி என்பதால் இவருக்கு ஆயிரம் கண்கள் உண்டு. ஆனால் யார் கண்ணிலும் சிக்காமல் பணியாற்றுபவர் என்பதுதான் இவரது சிறப்பு... இந்தியாவில் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் பெருமை மிக்க கீர்த்தி சக்ரா விருதை ஒரே ஒரு காவல் அதிகாரி பெற்றுள்ளார். அவர் வேறு யாருமல்ல அஜித் தோவல்தான். 2005இல் பணி ஓய்வு பெற்ற அஜித் தோவல் பின் இன்டலிஜன்ஸ் பீரோ எனப்படும் உள்நாட்டு உளவுத்துறை இயக்குநரானார்.

2014இல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக உயர்ந்த அஜித் தோவல் அதிமுக்கியம் வாய்ந்த அப்பதவியில் மேலும் சில ஆண்டுகள் பணியாற்ற உள்ளார். யாமிருக்க பயமேன் எனக் கூறாமல் கூறும் அஜித் தோவல் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து என்றால் அது மிகையில்லை.