இந்தியா

பஞ்சாப்பை தொடர்ந்து சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசிலும் உட்கட்சி பூசல் - தலைமைக்கு நெருக்கடி

Veeramani

பஞ்சாப்பை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசிலும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளதால் கட்சி தலைமைக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் முதலமைச்சராக உள்ள பூபேஷ் பாகலுக்கும், சுகாதார அமைச்சராக இருக்கும் திரிபுவனேஸ்வர் சரண் சிங்குக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இதையடுத்து, முதலமைச்சரை மாற்ற வேண்டும் என அவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இதனால் மாநில அரசில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் இரு நாட்களுக்கு முன் டெல்லி சென்றனர். அவர்களை தொடர்ந்து நேற்று மேலும் 6 எம்.எல்.ஏ.க்கள் டெல்லி விரைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் சத்தீஸ்கர் மாநில பொறுப்பாளர் பி.எல்.புனியாவை சந்தித்து முதலமைச்சரை மாற்றக் கூடாது என வலியுறுத்தவுள்ளனர். பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள பூசலால் கட்சியிலும், ஆட்சியிலும் அடுத்தடுத்து மாற்றங்கள் நடந்துவரும் நிலையில், சத்தீஸ்கரிலும் அதேபோன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது.