இந்தியா

இனி நீங்கள் விரும்பியவர்களுக்கு ரயில் டிக்கெட்டை மாற்றலாம்..!

Rasus

முன்பதிவு செய்து இருக்கை உறுதியான ரயில் டிக்கெட்டை வேறு ஒருவருக்கு இதுவரை மாற்றிக் கொடுக்க முடியாத நிலையில் தற்போது தேவையென்றால் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

உலகிலேயே 4-வது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட நாளில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்யக் கூடிய வசதியும் இந்திய ரயில்வேயில் உள்ளது. ஆனால் முன்பதிவு செய்து இருக்கை உறுதியான பின்பு, எதிர்பாராதவிதமாக அந்த நபர் பயணிக்க முடியவில்லை என்றால் அந்த இருக்கையை நம்மால் வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் வசதி இதுவரை இல்லை. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் முன்பதிவு செய்து இருக்கை உறுதியான பின்பும் நம்மால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்து கொடுத்துள்ளது.

இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டு முக்கிய ரயில் நிலையங்களில் பணியாற்றும் தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர்கள் மூலம், வேறு ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம்.

பணியில் இருக்கும் அரசாங்க ஊழியர்கள் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை வேறுஒருவருக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும் என நினைத்தால், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக, யாருக்கு மாற்றிக் கொடுக்க வேண்டுமோ அதுகுறித்த விவரங்களுடன் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் சக மாணவர்களுக்கு டிக்கெட்டை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றால் கல்வி நிறுவனத்தின் தலைவர் கையெழுத்துடன் முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் கொடுத்து பெயர்மாற்றம் செய்து கொள்ளலாம். இதேபோல் திருமண நிகழ்ச்சிக்காக மொத்தமாக ரயில் பயணம் செய்பவர்கள், 24 மணி நேரத்துக்கு முன்பாக கடிதம் எழுதி கொடுத்து இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.