இந்தியா

அரசியல்வாதிகளை ஏமாற்றி பாலியல் மோசடி - 4 ஆயிரம் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல்

webteam

மத்தியப் பிரதேசத்தில் அரசியல்வாதிகளை ஏமாற்றி பாலியல் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 4000க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மத்தியப் பிரதேசத்தில் அரசியல்வாதிகள், விஐபிக்கள், உயர் அதிகாரிகளை குறிவைத்து பாலியல் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. அவர்களை ஏமாற்ற அந்தக்கும்பல் கையாண்ட திட்டம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை சந்திக்கும் இளம் பெண்கள் ஏதாவது உதவி கேட்பது போல் அறிமுகம் செய்வார்கள். பின்னர் உதவிக்கு கைமாறாக பாலியலுக்கு இணங்கவும் தயார் என்று சொல்வார்கள். அதற்கு இணங்குபவர்களுடன் அந்தரங்கமாகவும் இருந்து அவர்களுக்கே தெரியாமல் புகைப்படங்கள், வீடியோக்களையும் எடுப்பார்கள். பின்னர் அந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் காட்டி மிரட்டி கோடிக்கணக்கில் பணத்தை பறிப்பார்கள். 

இந்நிலையில் அரசு பொறியாளர் ஒருவர் பாலியல் கும்பலின் மிரட்டலுக்கு பயப்படாமல் போலீசாரிடம் புகார் கொடுத்த பின்னரே இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இந்த விவகாரம் தொடர்பாக 5 பெண்கள், கார் ஓட்டுநர் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கும்பலிடம் இருந்து 4000க்கும் அதிகமான அந்தரங்கள் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. 

மேலும் அந்தரங்க வீடியோக்களின் ஸ்கிரீன் ஷாட்கள், ஆடியோக்கள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். வீடியோக்களில் மத்தியப் பிரதேசத்தின் முக்கிய உயர் அதிகாரிகள், காங்கிரஸ், பாஜக கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், விஐபிக்கள் என பலர் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து இந்த மோசடி கும்பல் கோடிக்கணக்கில் பணமும் பறித்துள்ளது.
 கும்பலிடம் இருந்து கைப்பற்றிய வீடியோக்கள் மட்டுமின்றி அழிக்கப்பட்ட பழைய வீடியோக்களையும் மீட்டெடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். எனவே விரைவில் அந்தரங்க வீடியோக்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் எனத் தெரிகிறது. 

தற்போது வீடியோ வெளியே கசியாமல் இருப்பது தான் சாவாலான விஷயம் என்றும், அரசின் உதவி பெறுவதற்காக பெண்கள் பலரையும் அணுகியுள்ளனர், எனவே முழு விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.