இந்தியா

2020-ல் அதிகரித்த குழந்தைத் திருமணங்கள் - எந்தெந்த மாநிலங்களில் அதிகம்?

சங்கீதா

2020-ம் ஆண்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்திருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், பின்னர் உலகம் முழுவதுக்கும் பரவியது. பெருந்தொற்றாக மாறிய இந்த கொரோனா வைரசால், உலக நாடுகள் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்தன. தற்போது கொரோனா தடுப்பூசி காரணமாக, பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதால், ஊரடங்கு, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-ம் ஆண்டில்,இந்தியா முழுவதும் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து இருந்ததாக, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம், குழந்தை திருமணங்கள் குறித்த எந்த தரவுகளும் இல்லாத நிலையில், தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகத்தின் தரவுகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

இதன்படி, 2019-ல், நாடு முழுவதும் 523 ஆக இருந்த குழந்தைத் திருமணங்கள், 2020-ல் 785 ஆக உயர்ந்துள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கர்நாடகத்தில் 2019-ம் ஆண்டில் 111 குழந்தைத் திருமணங்கள் பதிவாகியிருந்த நிலையில், 2020-ல் இந்த எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் 2019-ல் 115 ஆக இருந்த குழந்தைத் திருமணங்கள், 2020-ல் 138 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 46 ஆக இருந்த குழந்தைத் திருமணங்கள், 2020-ல் 77 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் 35 ஆக இருந்தநிலையில், 60 ஆக உயர்ந்துள்ளது. வறுமை காரணமாக பெண் குழந்தைகளை 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து தருவதும், பெண் குழந்தைகளை பாதுகாக்க எண்ணி, திருமணம் செய்துதருவதும் முக்கிய காரணங்களாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.