இந்தியா

வரலாற்றில் முதன்முறை: பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கு விசாரணை நேரலை

webteam

உச்சநீதிமன்றத்தின் மூன்று அரசியல் சாசன அமர்வுகள் வரலாற்றில் முதன்முதலாக நேரலை செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த மாதம் 26-ம் தேதி பதவி ஏற்று கொண்ட யு.யு. லலித் உச்சநீதிமன்ற நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது வாரத்தின் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முக்கியமான வழக்குகளை விசாரணை செய்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகளை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என சில மூத்த அவழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அனைத்து நீதிபதிகளிடமும் கடந்த வாரம் 21-ம் தேதி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் முதல் கட்டமாக அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படும் வழக்குகளை மட்டும் நேரலையில் ஒளிபரப்பு செய்ய அனைத்து நீதிபதிகளும் சம்மதம் தெரிவித்தனர். முதற்கட்டமாக இந்த நேரலை "யூடியூப்" வாயிலாக செய்யலாம் எனவும், பிறகு உச்ச நீதிமன்றத்திற்கு என தனியான ஒரு போர்டல் வடிவமைக்கப்பட்டு அதன் வழியாக நேரலை செய்யலாம் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் இன்றைய தினம் அரசியல் சாசன அமர்வு வழக்கு விசாரணைகள் (webcast.gov.in/scindia/) நேரலை செய்யப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான வழக்கு டெல்லி மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான அதிகார மோதல் போக்கு தொடர்பான வழக்கு மகாராஷ்டிரா அரசியல் குழப்பம் தொடர்பான வழக்கு, அகில இந்திய வழக்கறிஞர்கள் தேர்வு தொடர்பான வழக்கு ஆகியவை இன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் நேரலை செய்யப்பட்டது.