இந்தியா

டெல்லி பல்கலைக் கழக மாணவர் தேர்தல்: ஏபிவிபி அமைப்பினர் வெற்றி

rajakannan

டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் தேர்தலில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.

டெல்லி பல்கலைக் கழகத்தில் நேற்று மாணவர் தேர்தல் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் (ஏபிவிபி) மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் இடையே இதில் கடும் போட்டி நிலவியது. 40 சதவீதம் மட்டும் இந்த தேர்தலில் வாக்குகள் பதிவானது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில், மாணவர் தலைவர், துணைத் தலைவர் மற்றும் இணைச் செயலாளர் ஆகிய முக்கியமான மூன்று பதவிகளுக்கு ஏபிவிபி மாணவர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்கம் சார்பில் போட்டியிட்டவர் செயலாளர் பதவிக்கும் மட்டும் தேர்வானார்.

மாணவர் தலைவர் பதவியைப் பொறுத்தவரை காங்கிரஸ் அமைப்பின் வேட்பாளர் செட்ன தியாகியை, ஏபிவிபி வேட்பாளர் அஷ்வித் தஹியா 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த வருடமும் ஏபிவிபி அமைப்பினரே அதிக அளவில் வெற்றி பெற்றிருந்தனர்.

டெல்லி பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெறும் மாணவர் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த தேர்தல்களில் பங்கெடுத்து வெற்றி பெறுபவர்கள் பின்நாட்களில் தேசிய மற்றும் மாநில அரசியல்களில் அங்கம் வகிப்பார்கள். தற்போது உள்ள தலைவர்களில் கூட பலரும் அங்கிருந்து வந்தவர்களே.