இந்தியா

மடக்கி வைக்கக்கூடிய கொரோனா மருத்துவமனை.. ஐஐடி உதவியுடன் கேரளத்தில் அமைப்பு

webteam

சென்னை ஐஐடி நிதியுதவியுடன் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 16 படுக்கை வசதிகளுடன் கூடிய மடக்கி வைக்கக்கூடிய அளவிலான முன்மாதிரி மருத்துவமனையை உருவாக்கியுள்ளது. அதேபோல சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் 30 படுக்கை வசதிகளுடன் அமைக்கவும் உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா சிகிச்சைகளுக்காக எளிமையான முறையில் பயன்படுத்தக்கூடிய நான்கு மருத்துவமனைகளை அமைக்க, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கும் SCTIMST நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீசித்ர திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை ஐஐடி ஸ்டார்ட் அப்புடன் இணைந்து இந்த சிறிய மருத்துவமனைகளை உருவாக்கிவருகிறது. இதேபோன்று 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையை கர்நாடகா மாநிலத்தில் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த மடக்கக்கூடிய கேபினை வெளியே எடுத்துச் செல்லமுடியும். 1600 சதுர அடியில் உள்ள இந்த மருத்துவமனையை மடக்கி லாரியில் எடுத்துச் சென்றுவிடமுடியும். இந்த மருத்துவமனையை சில மணிநேரங்களில் நான்கைந்து பேரை வைத்துக்கொண்டு உருவாக்கிவிடமுடியும்.