இந்தியா

தங்க மங்கை ஸ்வப்னாவுக்கு பிரத்யேக 'ஷூ' கொடுக்கிறது ஐசிஎப்

webteam

மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு 6 செட் இலவச ஷூக்களை ஐசிஎப் பரிசாக வழங்குகிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 21 வயதான ஸ்வப்னா பர்மன் மொத்தம் 6026 புள்ளிகள் சேர்த்து முதலிடம் பிடித்தார். ‌சவாலாக விளங்கிய சீன வீராங்கனை குயின்லிங்கை விட 64  புள்ளிகள் கூடுலாக பெற்று ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கத்தை தமதாக்கினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

இவருக்கு பல்வலி மட்டும் இன்றி கால் வலியும் இருந்தது. ஸ்வப்னாவிற்கு இரண்டு கால்களிலும் 6 விரல்கள் உள்ளது. ஆசிய போட்டியில் அவர் பங்கேற்றபோது புதிய ஷூக்கள் அவருக்கு பொருந்தவில்லை. இதனால் அவர் விரலில் வலி ஏற்பட்டது. புதிய ஷூக்களை போட்டுக்கொண்டு அவரால் சரியாக செயல்படவும் முடியவில்லை. இதனால் அவர் பயிற்சியின் போது பயன்படுத்திய ஷூக்களை பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தனது விரல்களுக்கு ஏற்ற ஷூக்கள் இருந்தால் பிரச்னை இருக்காது எனவும் கூறியிருந்தார். இத்தகைய கஷ்டங்களுடன் தான் அவர் இந்தியாவிற்காக தங்கத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில் ஸ்வப்னாவின் ஆறு விரல்களுக்கு ஏற்ற ஷூவை பிரத்யேகமாக தயாரித்து பரிசாக வழங்கவுள்ளதாக சென்னை ஐசிஎப் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள ஐ.சி.எஃப். பொது மேலாளர் சுதான்ஷூ மாணி, “அமெரிக்காவின் நைக் நிறுவனத்திடம் ரயில்வே அதிகாரிகள் பேசியுள்ளனர். நைக் நிறுவனத்தின் மூலம் ஸ்வப்னாவிற்கு பிரத்யேக ஷூக்கள் தயாரித்து வழங்கப்படும். இதற்காக ஐசிஎப் விளையாட்டுத்துறை அதிகாரிகளும் நைக் நிறுவனத்திடம் தொடர்புகொண்டு கூறியுள்ளோம். இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் 6 ஜோடி ஷூக்களை நாங்கள் தங்க மங்கை ஸ்வப்னாவிற்கு அனுப்பி வைப்போம். ஆசிய போட்டியில் தங்கம் வென்று இந்தியாவை கெளரவித்த ஸ்வப்னாவிற்கு இந்த ஷூவை வழங்குவதில் ஐசிஎப் பெருமை கொள்கிறது” என்ரு தெரிவித்தார்.