இந்தியா

’திட்டமிட்டுதான் செய்தோம்’ - ஹைதராபாத் சிறுமி பாலியல் வன்கொடுமையில் இளைஞர் வாக்குமூலம்

Sinekadhara

ஐதராபாத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ’’நாங்கள் திட்டமிட்டுதான் சிறுமையை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினோம்’’ என கைதான இளைஞர்களில் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸ் என்ற பகுதியில் கடந்த மே 28-ம் தேதி, ஐந்து பேரால் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருந்தார். இச்சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை நாடு முழுவதும் ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த ஐவரும் இந்த வன்கொடுமையை திட்டமிட்டு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர்கள் இக்குற்றத்தில் ஈடுபடும் முன் அவர்கள் அருகிலிருந்த மருந்தகத்தில் ஆண்களுக்கான கருத்தடையான காண்டம் வாங்கியுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளதாக உள்ளூர் செய்திகளில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த மே 28-ம் தேதி, ஐதராபாத்தில் 17 வயது சிறுமியொருவர் ஜூப்லி ஹில்ஸ் என்ற பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில் நின்றுக்கொண்டிருந்த காரில் வைத்து 5 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தார். அதில் 4 பேர் 18 வயதுக்கும் குறைவான சிறார்கள். மகள் வீட்டுக்கு வராததால், அவரை வீட்டுக்கு அழைத்துச்செல்ல அவர் இருந்த இடத்துக்கு அன்றிரவு சென்றுள்ளார் அவரின் தந்தை. அங்கு தன் மகள் மோசமான நிலையிலிருப்பதை கண்டு அதிர்ந்திருக்கிறார். பின் அவர் கொடுத்த தகவலின்படி காவல்துறையினர் சென்று, அவரை மீட்டுள்ளனர். அதனையடுத்து விசாரணையும் தொடங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் தரவுகள் சேமிக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் தொடங்கிய இதுதொடர்பான விசாரணையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள், அப்பெண் தங்களிடம் நட்புடன் பழகியதாகவும், அதை சாதகமாக்கிக்கொண்டு அவரிடம் அத்துமீறியதாகவும் ஒப்புக்கொண்டிருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஐந்து பேரில், ஒருவர் எம்.எல்.ஏ.வின் மகன். இவர் இன்னும் சில மாதங்களில் 18 வயதை பூர்த்திசெய்ய உள்ளார். மற்றொரு சிறாரும் அரசியல் செல்வாக்கு உடையவர்தான். மற்றொரு சிறாரின் தந்தை கல்ஃபில் வேலை செய்துவருகிறார். அந்த சிறார் 7ஆம் வகுப்பு வரை சவுதி அரேபியாவில் படித்திருக்கிறார். இப்போது ஹைதராபாத்தில் படித்துவருகிறார்.

கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணையில் உள்ள 18 வயது இளைஞர் தாங்கள் திட்டமிட்டு இந்த வன்கொடுமைய அரங்கேற்றியதை ஒப்புக் கொண்டுள்ளார்.  அவர் கூறுகையில் நெல்லூரில் கைது செய்யப்பட்ட 17 வயதான சிறார்தான் இதற்கு மாஸ்டர் ப்ளான் போட்டதாகவும் கூறியுள்ளார். கேளிக்கை விடுதியிலிருந்து வரும்போதே சிறுமையையும் பென்ஸ் காரில் தங்களுடன் அழைத்துவர திட்டமிட்டதாகவும், ஆனால் எம்.எல்.ஏவின் மகன் அந்த காரில் ஏறிக்கொண்டு மற்றவர்களை இன்னோவா காரில் வரக்கூறிவிட்டு சென்றதாகவும் அந்த நபர் கூறியுள்ளதாக விசாரித்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.