கேரளா, வயநாடு pt web
இந்தியா

வயநாடு | 16 மணி நேரத்திற்கு முன்பே கொடுக்கப்பட்ட எச்சரிக்கை... அலட்சியத்தால் பறிபோனதா 150 உயிர்கள்?

Angeshwar G

13ஆவது மாவட்டமாக வயநாடு

கேரள நிலச்சரிவு ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கி உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கேரள வருவாய்த்துறை தகவலின்படி, உயிரிழப்புகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஒருபுறம் இருக்க, நிலச்சரிவிற்கான காரணங்களும் பலகோண ரீதியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

National Remote Sensing Centre

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மையங்களின் ஒன்றான தேசிய தொலை உணர்வு மையம் (National Remote Sensing Centre), இந்தியாவில் நிலச்சரிவு ஏற்படும் 30 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் கேரளாவில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் வயநாடு 13 ஆவது மாவட்டமாக உள்ளது.

தோட்டங்கள் தொடர்பான பரப்பளவு அதிகரித்ததும், காடுகளின் பரப்பளவு குறைவதும் நிலச்சரிவுக்கான முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகிறது. 1950 ஆம் ஆண்டு வரை வயநாட்டின் மொத்த பரப்பளவில் 85% வரை இருந்த காடுகளின் பரப்பளவு, அதன்பின் 1950 மற்றும் 2018க்கு இடைப்பட்ட காலங்களில் மட்டும் 62% பரப்பளவு காடுகள் காணமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மொத்த பரப்பளவில் 14% நிலச்சரிவிற்கு ஆளாகும் பகுதி

1961 முதல் 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் நிலச்சரிவு காரணமாக கேரளாவில் 295 பேர் இறந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு கேரள கோட்டயம் மற்றும் இடுக்கி பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் ஏகப்பட்டபேர் இறந்தனர். 2022 ஆம் ஆண்டிலும் நிலச்சரிவு, திடீர் மழை வெள்ளம் ஏற்பட்டன.

இடம்பெயர்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மையத்தின் தரவுகளின்படி எழுதப்பட்ட புத்தகத்தில், “சுமார் 600 கிமீ கடற்கரைப் பரப்புடன் கடலுக்கு அருகாமையில் இருக்கிறது கேரள மாநிலம். ஏராளமான ஆறுகள், ஏரிகள், உப்பங்கழிகள் அமைந்துள்ளன. மொத்த பரப்பளவில் 14 சதவீதம் நிலச்சரிவிற்கு ஆளாகும் பகுதிகளாக உள்ளன. கேரளா இயற்கைப் பேரழிவிற்கு மிகவும் பாதிப்படையக்கூடியது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவில் மழை பெய்யும்போது, அனைத்து அணைகளிலும் கட்டாயம் நீரைத் திறக்க வேண்டிய சூழல் ஏற்படுவதும், அதே சமயத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவதும் கடுமையான பாதிப்புகளுக்கு இட்டுச் செல்கின்றன.

நிலச்சரிவிற்கான முக்கியமான காரணங்கள் என்ன?

2018 ஆம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டங்களில் மட்டும் இயல்பை விட 42% அதிகமான மழை பொழிந்தது. 5000க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டன. கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர். 500 பேர் உயிரிழந்தனர். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டிலும் இதேபோன்று நிலச்சரிவு ஏற்பட்டதில் 60 சதவீதத்திற்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை என 7 ஆண்டுகாலக்கட்டத்தில் 3782 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக 2022 ஆம் ஆண்டு மக்களவையில் புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்திருந்தது. பருவநிலை மாற்றம் மற்றும் காடழிப்பு போன்றவை நிலச்சரிவிற்கான முக்கியமாக காரணமாக பார்க்கப்படுகிறது. 56%க்கும் அதிகமான நிலச்சரிவுகள் தோட்டப் பகுதிகளில் நடப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் நிலச்சரிவுகளில் கேரளா பெற்ற அனுபவத்தில் தற்போதுவரை அம்மாநில அரசு பாடம் கற்கவில்லை என்றே பல்வேறு சூழலியலாளர்கள் தெரிவிகின்றனர்.

16 மணி நேரத்திற்கு முன்பே கொடுக்கப்பட்ட எச்சரிக்கை

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளுக்கு இடையிலான 24 மணி நேரத்தில் மட்டும் வயநாடு மாவட்டம் 140 மிமீ மழை பெற்றுள்ளது. இது எதிர்பார்த்தைவிட 5 அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவு ஏற்படுவதற்கு 16 மணி நேரத்திற்கு முன்பே ஹுயூம் மையம் (Hume centre) நிலச்சரிவு எற்படுவதற்கான அபாயம் இருப்பதாக வயநாடு மாவட்ட நிர்வாகத்தை எச்சரித்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது. வயநாடு முழுவதும் அன்றாடம் பெய்த மழைப் பொழின் அளவீடுகளை கணக்கில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் 572 மிமீ மழை பதிவாகியுள்ளதன் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹியூம் செண்டரின் இயக்குநர் விஷ்னுதாஸ் கூறுகையில், “இந்த எச்சரிக்கை உள்ளாட்சி அமைப்புகளுக்கோ மக்களுக்கோ தெரிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 600 மிமீ-க்கு அருகாமையில் பெய்யும் எந்த மழையும் இப்பகுதியில் நிலச்சரிவுகளுக்கு இட்டுச் செல்லும்” என தெரிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகத்தின் தோல்வியே உயிரிழப்புகளுக்கான காரணம்

ஹியூம் மையம் கடந்த 4 ஆண்டுகளாக மழைப்பொழிவு தகவல்களை பகிர்ந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டு முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்படவுள்ளதாக ஹியூம் மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அப்பகுதி மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு பெருமளவிலான உயிரிழப்புகளைத் தடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேகங்கள் மற்றும் மழைப்பொழிவு தரவுகளை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் என தெரிவிக்கிறார் ஹியூம் செண்டரின் இயக்குநர் விஷ்னுதாஸ்.

பேரிட மேலாண்மை பொறியாளர் பிரபுகாந்தி ஜெயின் புதிய தலைமுறையிடம் பேசுகையில், வயநாட்டை வாழத் தகுதியற்ற நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் தோல்விதான் 150 பேரின் மரணம் என்றும் தெரிவித்துள்ளார்.