இந்தியா

“பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுமா?” - மத்திய அமைச்சர் விளக்கம்

webteam

மதிய உணவு திட்டத்தில் காலை உணவு கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மதிய உணவு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தில் காலை உணவு விரைவில் சேர்க்கப்படவுள்ளது என்று சில தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கமளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க், “தற்போது மதிய உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கும் எண்ணம் எதுவும் இல்லை. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன்படி 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் அந்த மாநிலங்களின் முயற்சியால் மதிய உணவுடன் சேர்த்து பால், மூட்டை மற்றும் பழங்கள் வழங்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார். 

இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த 2018-19ஆம் ஆண்டு சராசரியாக 11.34 லட்சம் பள்ளிகளில் பயிலும் 9.17 கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.