இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் pt web
இந்தியா

அது என்ன தொங்கு நாடாளுமன்றம்! இந்தியாவில் எத்தனை முறை அமைந்தது? கவிழ்க்கப்பட்டது எத்தனை முறை?

Angeshwar G

நாடே எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (04.06.2024) வெளியாகவுள்ளன. பாஜக தரப்போ பெரும்பான்மை கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம். மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என மார்தட்டும் சூழலில், INDIA கூட்டணித் தலைவர்களோ 295 இடங்களில் நாங்கள் வெல்வோம் என்கின்றனர். யாரேனும் ஒருவர் வென்றுதான் தீர வேண்டும். ஆனால், வெற்றி தேவதை யாருக்கும் கிடைக்காமல், நடுத்தரமாக சம்மணமிட்டு அமர்ந்துவிட்டால் என்ன செய்வது. அதாவது தொங்கு நாடாளுமன்றம் அமைந்துவிட்டால்? இதற்கு முன்னால் அப்படி நடந்திருக்கிறதா? அப்படியானால் அப்போது பிரதமராக இருந்தது யார்? தொங்கு பாராளுமன்றத்தோடு தனது ஆட்சிக்காலத்தை முழுவதுமாக முடித்த பிரதமர் இருக்கின்றாரா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

மக்களவை தேர்தல்

தொங்கு நாடாளுமன்றம் என்றால் என்ன?

எந்த ஒரு கட்சிக்கோ அல்லது தேர்தலுக்கு முன்பு அமைத்த கூட்டணிக்கோ ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், அங்கு தொங்கு பாராளுமன்றம் அமையும். மக்களவையில் மொத்தம் 543 இடங்கள் இருக்கின்றன. இதில் பெரும்பான்மை பெற வேண்டுமானால் 272 தொகுதிகள் தேவை. அப்படி இல்லை, 272 தொகுதிகளுக்கு கீழ் தான் ஒரு கட்சியோ அல்லது கூட்டணியேவோ தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறதென்றால், வெளியில் இருக்கும் கட்சிகள் அல்லது சுயேட்சைகளின் உதவியுடன் ஆட்சி அமைக்கும். ஆதரவளித்த கட்சிகள் அல்லது சுயேட்சைகள் எப்போது வேண்டுமானாலும் தங்களது ஆதரவை விளக்கிக்கொள்ளும் சூழலில் ஆட்சி கவிழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. இதற்கே தொங்கு நாடாளுமன்றம் என்று பெயர்.

இந்தியாவில் எப்பொழுது எல்லாம் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது?

சுதந்திர இந்தியாவில் அதாவது 1951 முதல் 1984 வரை நடந்த தேர்தல்களில் ஏதாவது ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையாக ஆட்சியில் அமர்வதே வழக்கம். ஆனால் 1989 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 197 இடங்களைப் பெற்றிருந்தது. ஆனாலும் ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை ராஜீவ் நிராகரித்துவிட்டார். அந்த தேர்தலில் ஜனதா தளம் 143 இடங்களிலும், பாஜக 85 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸை எதிர்த்து தேர்தலை சந்தித்தன ஜனதா தளம் மற்றும் பாஜக. எனவே, ஜனதா தளத்திற்கு பாஜக ஆதரவளிக்கும் என்ற நிலை உருவானது. ஆதரவு கிடைத்தது, விபி சிங் பிரதமரானார். ஆனால் மண்டல் கமிஷன் விவகாரம் இதில் சூட்டைப் பற்றவைத்தது. ஆனால் இதையும் தாண்டி அயோத்தி விவகாரம் இந்த ஆதரவை விலக்கிவிட்டது.

இதன்பின்னர் 21 நவம்பர் 1990ல் அதே ஜனதா தளத்தின் மற்றொரு தலைவரான சந்திரசேகர் தலைமையில் புதிய அரசு அமைந்தது. ஆனால் சமாஜ்வாதி ஜனதா என்ற தனிக்கட்சியாக சந்திரசேகர் ஆதரவாளர்கள் செயல்பட்டனர். ஆனால் 223 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்த சந்திரசேகர் அரசியல் நெருக்கடிகள் காரணமாக தனது பதவியையே ராஜினாமா செய்தார். இதற்குப் பின் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதுதான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் நடந்த தேர்தலில் காங்கிரஸ், வரலாற்றில் இல்லாத அளவில் 400 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

13நாட்களில் கவிழ்ந்த பாஜக அரசு

1996 தேர்தல் முடிவுகளிலும் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை., அதிகபட்சமாக பாஜக 161 இடங்களைக் கைப்பற்றி இருந்தது, ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 140 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது. பெரும்பான்மை இல்லாத சூழலில் தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா. சில கட்சிகளின் ஆதரவில் பிரதமராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். ஆனால் அப்போதைய அரசியல் சூழல் அறுதிப்பெரும்பான்மையை நிரூபிப்பது என்பது பாஜகவிற்கு சிக்கலானதாக இருந்தது. ஏனெனில், பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான சூழலை எதிர்பார்த்து காத்திருந்தன,. இதன் விளைவாக ஐக்கிய முன்னணி உருவானது. ஐக்கிய முன்னணிக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவளித்தது,. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழலில் பிரதமர் வாஜ்பாய் பதவி விலகினார்; பாஜக அரசு 16 நாட்களில் கவிழ்ந்தது. இத பின்னர் ஜூன் 1 1996 அன்று பிரதமராக பொறுப்பேற்றார் தேவகவுடா.

ஐ கே குஜ்ரால் அரசு

தொடர்ந்து 30 மார்ச் 1997ல் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, ஐக்கிய முன்னணிக்கு அளித்துவந்த ஆதரவை விளக்கிக் கொள்ள குடியரசுத் தலைவர் கே ஆர் நாராயணனைச் சந்தித்தார். இதற்கு பின் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முன்னணி தலைவர்கள் இடையே பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தது. முடிவாக பிரதமர் மாற்றம் செய்யப்பட்டார். 1997 ஏப்ரல் 21ல் ஐ.கே. குஜ்ரால் பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் ஜெயின் கமிஷன் விவகாரத்தில் காங்கிரஸ் தனது ஆதரவை 1997 நவம்பர் 28 ஆம் தேதி விளக்கிக் கொள்ள, முடிவில் பிரதமர் குஜ்ரால் தனது பதவியை ராஜினாமா செய்தார்,

13 மாதங்களில் மீண்டும் கவிந்த பாஜக

பின், 1998 பிப்ரவரி மாதத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முடிவில், பாஜக 182 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ் 141 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. முடிவில் பாஜக தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மார்ச் 19 1998 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்றார் வாஜ்பாய். ஆனாலும் ஆட்சி நீடிக்கவில்லை. தனது ஆதரவை 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அதிமுக விலக்கிக்கொண்டது. முடிவில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தோற்றது. 13 மாதங்கள் மட்டுமே பாஜக அரசு நீடித்தது. இதன்பின்னர் காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டது. அடுத்த தேர்தலில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைத்து, ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆண்டது.

தொங்கு நாடாளுமன்றத்தை முழுமையாக ஆண்ட மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

பின்னர் 2004 ஏப்ரல் 20 முதல் மே 10 வரை அடுத்த தேர்தல் நடந்தது,. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 215 தொகுதிகளை மட்டுமே வெம்றிருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 187 தொகுதிகள் கிடைத்தது. அந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களில் வென்றிருந்த இடதுசாரிகள், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை ஆதரிக்க, 2004 மே 22 அன்று பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பேற்றார். தொங்கு பாராளுமன்றத்தைத் தான் வழிநடத்தினார் மன்மோகன் சிங். ஆனால் முழுமையாக.. 2009 தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மொத்தமாக 262 இடங்களே கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு 206 இடங்கள் கிடைத்தன. சிக்கல் இல்லாமல் இந்த ஆட்சியை காங்கிரஸ் கடந்தது.

தேர்தல் முடிவுகளில் பாஜக 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் காங்கிரஸின் எதிர்பார்ப்புப்படி, INDIA கூட்டணி ஏறத்தாழ 225 தொகுதிகளுக்கு மேல் வென்றாலே தொங்கு பாராளுமன்றத்திற்கு வாய்ப்பு உள்ளது. எனவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.