ராஜஸ்தான்  ஃபேஸ்புக்
இந்தியா

பாதிப்படைந்த சிறுநீரகத்திற்கு பதிலாக பெண்னின் ஆரோக்கியமான சிறுநீரகத்தை அகற்றிய மருத்துவமனை!

ஜெனிட்டா ரோஸ்லின்

ராஜஸ்தானின், நுவா கிராமத்தை சேர்ந்தவர் ஈத் பானு, வயது 30. இவர் மே 15-ஆம் தேதி, ஜீன்ஜீனு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக கற்கள் பிரச்னை தொடர்பான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது , அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஈத் பானுவின் இடது சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளதால் அதனை அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெண்ணின் உறவினர் சஜித் அலி ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ ஈத் பானு சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆக, சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளதால் அதனை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால், மே 15-ஆம் தேதி நடந்த அறுவைசிகிச்சையின்போது, பாதிக்கப்பட்டவரின் இடது சிறுநீரகத்திற்கு பதிலாக வலது சிறுநீரகத்தை மருத்தவர்கள் எடுத்துவிட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈத் பானுவின் உடல்நிலை மிகுந்த மோசமடைந்ததால், மே18-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம் எஸ் மருத்துவமனைக்கு டாக்டர் சஞ்சய் தன்கர் என்பவரின் மேற்பார்வையில் செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டார். அங்கு சென்று பரிசோதனை செய்ததில், இவரின் பாதிப்படைந்த இடது சிறுநீரகம் நீக்கப்படாமல் , ஆரோக்கியமான வலது சிறுநீரகம் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில், இது குறித்து போலீஸில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, இதனை விசாரிக்க 5 பேர் கொண்ட விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஈத் பானு, தற்போது பிகோனேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டயாலிசிஸ் செய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும், இவரின் உடல்நிலை சீரான பிறகு பாதிப்பட்ட இடது சீறுநீரகம் அகற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து ஜீன் ஜீனு மாவட்ட ஆட்சியர் சின்மயில் கோபால் கூறுகையில்,” நோயாளியின் மருத்துவ பதிவுகளை கைப்பற்றி மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளோம் “ என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் ஈத் பானுவின் உடல்நிலையை மோசமாக்கியதோடு, அவரின் குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.