himachal pradesh x page
இந்தியா

பாஜக அரசை பின் தொடரும் காங்கிரஸ் அரசு| உபியைப்போல் ஹிமாச்சலிலும் உணவகங்களில் பெயர் வைக்க உத்தரவு!

Prakash J

உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை நடத்தப்படுவது வழக்கம்.

இந்த யாத்திரையின்போது சிவபக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாகச் சென்று சிவாலயங்களில் வழிபடுகின்றனர். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான கன்வார் யாத்திரை கடந்த ஜூலை 22ஆம் தொடங்கியது. ஆகஸ்ட் 6ஆம் தேதிவரை நடைபெற்ற யாத்திரையின்போது, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்தது.

அதன்படி, உத்தரப்பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் இருக்கும் உணவகங்கள், உணவு வண்டிகளில் உணவக பெயர்ப் பலகையில் அதன் உரிமையாளர் பெயர் இடம் பெறவேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. இதேபோல், உத்தரகாண்ட் அரசும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு, முஸ்லிம் வணிகர்களை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக குறைகூறின.

இதையும் படிக்க: மும்பை|'மேன்ஹோல்' விபத்து.. 45வயது பெண் உயிரிழப்பு.. பின்னணியில் திருட்டுச் சம்பவங்கள்.. பகீர் தகவல்

இந்த நிலையில், இதேபோன்ற உத்தரவை காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சல பிரதேச அரசும் பிறப்பித்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர் அடங்கிய பலகையை வைக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் விக்கிரமாதித்யா சிங், “உத்தரப்பிரதேசத்தைப்போல் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்தப் போகிறோம். நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் உள்ளாட்சி துறை இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. உணவு குறித்த மக்களின் அச்சத்தைப் போக்க இந்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: என்னது தூங்குறதுக்கு லட்சம் லட்சமா பரிசா! ஸ்லீப் சாம்பியன் போட்டியில் 9 லட்சம் வென்ற பெங்களூரு பெண்!