இந்தியா

கன்னியாகுமரியில் மூன்றாவது நாளாக தொடரும் கனமழை - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Veeramani

கன்னியாகுமரியில் மூன்றாவது நாளாக தொடரும் கனமழை காரணமாக, நான்காயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

கன்னியாகுமரியில் மலையோர பகுதிகளான கோதையார், பேச்சிப்பாறை, சிற்றார் உள்ளிட்ட இடங்களிலும், கடலோரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணத்தில் கடல்சீற்றத்துடன் காணப்படுவதால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர். தொடர் மழை காரணமாக, 48 அடி கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44 அடியை தாண்டியதால், ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், திற்பரப்பு நீர் வீழ்ச்சி, தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கடுத்து ஓடுகிறது. நெல்லை மாவட்டத்திலும் கடலோரப்பகுதிகளில் மழை பெய்து வருவதால், உவரி, கூடுதாழை மீனவ கிராமத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.