இந்தியா

சமூக வலைதள கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது: நீதிமன்றம்

webteam

ஆதார், பான் எண்களை சமூக வலைதள கணக்குகளுடன் இணைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்க முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் இருக்கும் கணக்குகளில் 20 சதவிகிதம் போலியானவை என்றும், எனவே அவற்றை கண்டுபிடித்து நீக்க ஆதார், பான் எண்களை சமூக வலைதள கணக்குகளுடன் இணைக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி டெல்லி பாஜக தலைவர் அஸ்வினி குமார் உபாத்யாய டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி படேல், நீதிபதி ஹரி சங்கர் தலைமையிலான அமர்வு, சமூக வலைதள கணக்குகளுடன், ஆதார், பான் அல்லது பிற அடையாள ஆவணங்களை இணைக்க வேண்டும் என நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது என்றும், இதற்கான கொள்கைகளையும், சட்டத் திருத்தங்களையும் மத்திய அரசுதான் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

20 சதவிகித போலி கணக்குகளை கண்டுபிடிப்பதற்காக உண்மையான கணக்குகளை வைத்திருக்கும் நபர்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும், மேலும், அனைத்து தகவல்களும் வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதால், இந்த விவகாரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டியிருக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.