ஆர்யன் மிஸ்ரா எக்ஸ் தளம்
இந்தியா

ஹரியானா | காரில் பசு கடத்துவதாக வந்த தகவல்.. 12ஆம் வகுப்பு மாணவரை சுட்டுக் கொன்ற கும்பல்!

Prakash J

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாட்டில் ஒட்டுமொத்தமாக ‘பசு காவலர்’களால் நடத்தப்படும் கொலைவெறி வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து இந்தக் கொடூரச் செயல்கள் அடிக்கடி நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், ஹரியானா மாநிலத்தில் காரில் பசுவைக் கடத்தியதாகத் நினைத்து 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை பசு பாதுகாப்பு காவலர்கள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பரிதாபாத் நகரில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு, கார்களில் பசு கடத்தப்படுவதாக ‘பசு காவலர்’களுக்கு ‘தகவல்’ கிடைத்துள்ளது. இதையடுத்து துப்பாக்கியுடன் பசு காவலர்கள், படேல் சவுக் சாலையில் வந்த ரெனால்ட் டஸ்ட்டர் காரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து, அந்த காரை சுமார் 25 கிலோ மீட்டருக்கு தங்களது வாகனத்தில் துரத்திச் சென்ற பசு காவலர்கள், காருக்குள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் தனது நண்பர்களுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஆர்யன் மிஸ்ரா மீது குண்டுபட்டு படுகாயமடைந்தார். கார் நின்றவுடன் அவர்கள் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் ஆர்யன் மார்பில் மேலும் ஒரு குண்டு துளைத்தது.

இதையும் படிக்க: திடீரென உயிரிழந்த ‘ரஷ்ய உளவாளி’ ஹவால்டிமிர் திமிங்கலம்.. விசாரணை நடத்த முடிவு.. பிரபலமானது எப்படி?

அதன்பின்னரே தாங்கள் தவறான காரை துரத்தியுள்ளோம் என்று அறிந்த பசு காவலர்கள், அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஆரியன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தற்போது பசு காவலர்கள் 5 பேரைக் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, ஹரியானாவின் சார்க்கி தாத்ரி மாவட்டத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகத்தின் பேரில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் பசு காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஜூன் 30ஆம் தேதி ராஜஸ்தானில் பசு கடத்தப்படுவதாக வந்த தகவலின் பேரில் பசு காவலர்கள் சிலர், எலுமிச்சை பழங்களை ஏற்றிச் சென்ற டிரக்கை வழிமறித்து அதில் இருந்தவர்களை கொடுமையாக தாக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் | ஆஃபர் விலையில் திறக்கப்பட்ட மால்.. அரை மணிநேரத்தில் சூறையாடிய பொதுமக்கள்.. #ViralVideo