நீட் தேர்வு x page
இந்தியா

நீட் தேர்வில் 705 மார்க்.. ஆனால், +2வில் Fail.. துணைத்தேர்விலும் தோற்று சர்ச்சையில் சிக்கிய மாணவி!

Prakash J

நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து இதுகுறித்த மர்ம முடிச்சுகள் நாள்தோறும் அவிழ்ந்தவண்ணம் உள்ளன. சிபிஐயும் தீவிரமாக விசாரித்து வருவதுடன், மோசடியில் ஈடுபட்டவர்களையும் கைது செய்து வருகிறது.

நீட் தேர்வு

மேலும், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இறுதியில், கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டதன் அடிப்படையில் திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், +2 பொதுத் தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியலில் தோல்வியடைந்த மாணவி, நீட் தேர்வில் மட்டும் 705 மதிப்பெண்கள் பெற்றிருப்பது மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

சம்பவத்தின்படி குஜராத்தை சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் 720க்கு 705 பெற்று இருந்தார். இந்த மாணவி +2 பொதுத் தேர்வில் முக்கிய பாடங்களான வேதியியல் மற்றும் இயற்பியலில் 31 மற்றும் 21 மதிப்பெண்களை பெற்று தோல்வியடைந்துள்ளார்.

இதையும் படிக்க: “ரூ.1200 கோடி கட்டடத்தை பாதுகாக்க ரூ.120 பக்கெட்”- ஒழுகிய மழைநீர்.. விமர்சனத்தில் புதிய நாடாளுமன்றம்

ஆனால் இதேநேரத்தில், நீட் தேர்வில் இம்மாணவி வேதியியல் மற்றும் இயற்பியலில் 99.14 மற்றும் 99.89 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இருந்தபோதிலும், அவர் +2வில் தோல்வியடைந்ததால், கல்லூரிக்குச் செல்லத் தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதனால், மீண்டும் நடத்தப்பட்ட +2 துணைத் தேர்வை எழுதினார் அம்மாணவி. அதன் முடிவுகள் தற்போது வெளியான நிலையில், மாணவி இதிலும் தோல்வியடைந்திருக்கிறார். மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வில் இயற்பியல் பாடத்தில் வெறும் 21 மதிப்பெண் பெற்றிருந்த மாணவி, தற்போது துணைத் தேர்வில் 22 மதிப்பெண்கள்தான் பெற்றுள்ளார்.

நீட் தேர்வு

அதுபோல், வேதியியல் பாடத்தில் மார்ச் மாதத் தேர்வில் 31 மதிப்பெண்கள் எடுத்திருந்தவர், தற்போது 33 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதில் அவர் ஜஸ்ட் பாஸ் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, ‘சாதாரண பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் தேர்ச்சிகூட பெறமுடியாத அந்த மாணவி, எவ்வாறு நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் எடுத்திருக்க முடியும்?’ என விமர்சனம் எழுந்துள்ளது. மேலும், அவர் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால், எம்பிபிஎஸ் சேரமுடியாத நிலைக்கும் (!) தள்ளப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே நீட் தேர்வைப் பற்றி பல மோசடிப் புகார்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், +2வில் தோல்வியடைந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் 705 மதிப்பெண்களும் எடுத்திருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி படுகொலை! யார் இந்த முகமது டெய்ஃப்?