GST  face book
இந்தியா

ஏப்ரல் 2024 | நாட்டில் GST வசூல் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சம்... புள்ளிவிவரம் இதோ...

ஜெனிட்டா ரோஸ்லின்

சரக்கு மற்றும் சேவை வரியில் நாடு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடுப்பட்டுள்ள அறிவிப்பின் மூலம் தெரியவரும் பிற விவரங்களை காணலாம்...

“இதுவரை இல்லாத சாதனை அளவாக, 2024 ஏப்ரல் மாதத்தில் ரூ 2.10 லட்சம் கோடி சரக்கு, சேவை வரி வசூலாகி உள்ளது.

ஏப்ரல் 2024க்கான நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.92 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நிகர வருவாய் (திரும்பப் பெற்ற பிறகு) 17.1 சதவீத வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

2023 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது மொத்த வருவாய் வசூல் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட வலுவான அதிகரிப்பு (13.4 சதவீதம்) மற்றும் இறக்குமதிகளில் ஏற்பட்ட அதிகரிப்பு (8.3 சதவீதம்) ஆகியவற்றால் உந்தப்பட்டுள்ளது.

வசூலிக்கப்பட்ட வரி விவரங்கள்:

  • மத்திய சரக்கு மற்றும் சேவை வரி - ரூ.43,846 கோடி

  • மாநில சரக்கு மற்றும் சேவை வரி - ரூ.53,538 கோடி

  • ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி - ரூ.99,623 கோடி (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் கிடைக்கப்பெற்ற ரூ 37,826 கோடி உட்பட)

  • செஸ் வரி - ரூ.13,260 கோடி (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் கிடைக்கப்பெற்ற ரூ 1,008 கோடி உட்பட)

சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ. 2.10 லட்சம் கோடியை கடந்தது இதுவே முதன் முறையாகும்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.12,210 கோடியாக உயர்ந்ததுள்ளது என்பது இந்த அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2023 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜிஎஸ்டி வசூல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு விவரத்தை, இங்கே க்ளிக் செய்து காணலாம்.