இந்தியா

“சாத்வி பிரக்யாவுக்கு சீட் தந்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” - சரத் பவார்

webteam

குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு சீட் கொடுக்கப்பட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். 

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்வி பிரக்யா தாகூர் பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். சாத்வி பிரக்யாவை பாஜக களமிறக்கியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த வழக்கில் கடந்த வாரம் தேசிய புலனாய்வு பிரிவு  நீதிமன்றத்தில் சாத்வி பிரக்யா ஆஜர் ஆனார். 

இதனிடையே கோட்சே ஒரு தேசபக்தர் எனக் கூறி பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பை சம்பாதித்தவர் சாத்வி பிரக்யா. இதற்கு பாஜகவும் சாத்வி பிரக்யாவுக்கு கண்டனத்தை தெரிவித்தது. அதன்பிறகு பாஜகவின் நிலைப்பாடே தன்னுடைய நிலைப்பாடு என சாத்வி பிரக்யா தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்கினார். 

மகாராஷ்டிர மாநிலம் மலோகனில் 2008இல் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இருச்சக்கர வாகனத்தில் வைத்து இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரக்யா சிங் ஏற்கனவே இரண்டு முறை உடல்நிலையை காரணம் காட்டில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தற்போது முதன்முறையாக விசாரணைக்கு ஆஜராகினார்.

இந்நிலையில், சாத்வி பிரக்யாவை பாஜக தேர்தலில் களமிறக்கியது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், மலேகான் குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு சீட்  கொடுக்கப்பட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என சாடினார்.