இந்தியா

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது

webteam

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நிரவ் மோடி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

நிரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. ஆனால், இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நிரவ் மோடி, தனது இடத்தை அடிக்கடி மாற்றி வருவதாக கூறப்பட்டது.  நிரவ் மோடியை கைது‌ செய்ய மத்திய அரசு இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோ‌ட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் லண்டனுக்கு ‌தப்பிச் சென்ற நிரவ் மோடி, அங்கிருந்த‌படி மீண்டும் வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியானது. ‌இங்கிலாந்தி‌ன் டெலிகிராப் பத்திரிகை இத்தகவலை வெளியிட்டிருந்தது. இதனால் இந்தியாவின் அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடியை இந்தியாவிடம் ஓப்படைக்க கோரி மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கில் லண்டன் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இதனையடுத்து நிரவ் மோடி லண்டனில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் நீதிமன்றத்தின் முன் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.