ஃபிளமிங்கோ புதிய தலைமுறை
இந்தியா

மும்பை: விமானத்தில் அடிபட்டு 36 ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழப்பு? - வனத்துறை அதிகாரிகள் சந்தேகம்

Jayashree A

மும்பை விமான நிலையத்தில் நேற்று இரவு துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் EK 508 விமானம், சிறிய சேதத்துடன் பயணிகளைப் பாதுகாப்பாக தரையிறக்கியது. விமானம் சேதமடைந்ததற்கு ஃபிளமிங்கோ பறவை விமானத்தை தாக்கியதுதான் காரணம் என்று விமானிகள் கூறியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, விமான அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவம் நடந்த இடமான லக்ஷ்மி நகருக்கு (காட்கோபர் கிழக்கின் வடக்கு முனை) சென்று பார்த்ததில் அங்கு 36 ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலரான டி.ஸ்டாலின் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் “சாதாரணமாக பறவைகள் இரவில் வானத்தில் பறப்பது மிகவும் அரிது. ஒருவேளை இந்த பறவைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக யாராவது இந்த பறவைகளை துரத்தி இருக்கலாம், அதனால் இவை இரவில் வானத்தில் பறந்திருக்கலாம். என்ஆர்ஐ வளாகத்தில் உள்ள ஈரநிலங்கள் மற்றும் டிஎஸ் சாணக்யா ஏரிகளில் ஃபிளமிங்கோகள் அதிகமாக காணப்படும். ஆனால் இப்பகுதியை கையகப்படுத்த நினைக்கும் சிலரால் இப்பறவைகளுக்கு இடையூறு ஏற்பட்டு இருக்கலாம்.

முன்பெல்லாம் பறவைகளின் சரணாலயத்திற்கு அருகில் எந்த மின் பாதையும் கிடையாது. ஆனால் தற்பொழுது சரணாலயம் அருகில் மின்கம்பி, மின் கோபுரம், போடப்பட்டிருப்பதாலும் இப்பறவைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கலாம். பறவைகளினால் மும்பை விமானநிலையத்திற்கு ஆபத்து என்று கூறிவரும் சிட்கோவிற்கும் இந்த பறவைகள் இறந்ததற்கும் கூட ஏதாவது சம்பந்தம் இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

எனினும் பறவைகள் கொல்லப்பட்டதா அல்லது விபத்தால் இறந்ததா என்று வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.