nirmala sitharaman Twitter
இந்தியா

பட்ஜெட் 2024 - மத்திய அமைச்சரவை ஒப்புதல்... தாக்கல் செய்ய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆயத்தம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

18வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவி ஏற்றது. இதில் 2019ம் ஆண்டு முதல், நாட்டின் முழு நேர நிதியமைச்சராக இருந்து வரும் நிர்மலா சீதாராமனே மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்காக பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பான ஆலோசனையில், நிதியமைச்சகத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய பட்ஜெட் 2024 - 2025

இந்த பட்ஜெட்டில் விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு, ராணுவம், பாதுகாப்பு, மகளிர் நலம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும், இந்த நிதியாண்டை பொறுத்தவரை மூலத்தன செலவுகளுக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், பட்ஜெட் சார்ந்த விஷயங்கள் வெளியில் கசிந்துவிட கூடாது என்பதற்காக, நிதியமைச்சகத்திலேயே வைத்து, பட்ஜெட் உருவாக்கப்பட்டது. அங்கேயே அச்சிடும் ஊடகமும் உள்ளது.

ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பிறகு நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

அங்கு நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து மத்திய அமைச்சரவை பட்ஜெட்டுக்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து, காலை 11 மணி அளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய ஆயத்தமாகி வருகிறார். இந்தவகையில், பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஆயுத்த பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.