Naegleria fowleri ட்விட்டர்
இந்தியா

மூக்கு வழியாக நுழைந்து மூளையை உண்ணும் அமீபா; விநோத நோய்க்கு 5 வயது கேரள சிறுமி பலி!

Prakash J

எப்போதுமே குழந்தைகளை, எல்லா நோய்களும் எளிதில் தாக்கிவிடக் கூடிய அபாயம் உள்ளது. பொதுவாக, எல்லாச் சூழ்நிலைகளிலுமே ஏதாவது ஒரு நோய், குழந்தைகளைத் தாக்கிக் கொண்டே இருப்பது இயல்பது என்றாலும் அவற்றிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பது பெற்றோரின் கட்டாய கடமையாகும். அந்த வகையில் கேரள மாநிலத்தில், குளத்தில் குளித்த சிறுமி ஒருவருக்கு, விநோத பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது மருத்துவ உலகையே அதிரவைத்துள்ளது.

கேரள மாநிலம், மலப்புரம் மூன்னியூர் பகுதியில் வசித்து வந்த 5 வயதுச் சிறுமி ஒருவர், கடந்த மே 1ஆம் தேதி, வீட்டின் அருகிலிருந்த குளத்தில் குளித்துள்ளார். பின்னர், மே 10ஆம் தேதி முதல் அந்தச் சிறுமிக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி நேற்று (மே 20) உயிரிழந்தார். மலப்புரத்தில் அரிய வகையிலான அமீபிக் தொற்று மூலம் 5 வயது சிறுமி உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “CSK இல்லைன்னா என்ன, தமிழர்கள் இருக்காங்க..” - Playoff-ன் 4 அணிகளிலும் தமிழக வீரர்கள்.. ஒரு பார்வை!

இதையடுத்து அந்தச் சிறுமியின் மரணம் குறித்து மருத்துவர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில்தான் அந்தச் சிறுமிக்கு அமீபிக் என்செபாலிடிஸ் என்ற பாதிப்பு இருந்ததை உறுதி செய்துள்ளனர். இந்த பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழக்க 97% வாய்ப்பு இருக்கிறது. இது, பொதுவாக ‘மூளையை உண்ணும் அமீபா’ எனப்படும். குழந்தையின் மூளையில் 'நாகிலேரியா ஃபோலேரி’ (Naegleria fowleri) அமீபா இருந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அசுத்தமான நீரில் காணப்படும் இந்த வகை அமீபா, ஒட்டுண்ணி வகையைச் சாராதது.

இவை, மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையை அடைந்து மூளைத்திசுக்களை அழிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இறந்த சிறுமியுடன் சேர்ந்து குளத்தில் குளித்த மற்ற குழந்தைகளும் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லாததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இந்த வகைத் தொற்று மூலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த 2017, 2023 ஆண்டுகளில் சிலர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஈரான் அதிபர் மரணம்: விபத்தா.. சதியா? மொசாட்டிற்கு தொடர்பு? பின்னணியில் பகீர் கிளப்பும் புதியதகவல்கள்