இந்தியா

சட்டீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

rajakannan

சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 5 பெண்கள் உட்பட 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

பீஜபூர் மாவட்டத்தில் உள்ள இபெண்டா பகுதியில் சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா போலீசார் நடத்திய கூடுதல் தேடுதல் வேட்டையின் போது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட்(மாவோயிஸ்ட்) கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள். கொல்லப்பட்ட நக்சலைட்களிடம் இருந்து ஒரு ரைஃபில் துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, 6 ராக்கெட் லாஞ்சர்ஸ், ஆலிவ் பச்சை வண்ண ஆடைகள் அடங்கிய பைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா எல்லையில் உள்ள பூபல்பள்ளி பகுதியில் இந்த என்கவுண்ட்டர் நடைபெற்றுள்ளது. 

நக்சலைட்டுகள் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் சட்டீஸ்கர், மகாராஸ்டிரா மற்றும் தெலுங்கானா மாநில போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து என்கவுண்ட்டர் நடத்தி வருகின்றனர். சமீப காலமாக சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வரும் என்கவுண்ட்டர்களில் நக்சலைட்டுகள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலி மாவட்டத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய என்கண்ட்டரில் 35 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.