இந்தியா

புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

webteam

புதுச்சேரி மாநிலத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவை பொருத்தவரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 6,761லிருந்து 7447 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 206 லிருந்து 239 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 516லிருந்து 643 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 40 உயிரிழப்புகளும், 1035 பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் முதல்முறையாக கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் மாஹே பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் 8 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் குணமாகியுள்ள நிலையில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து புதுச்சேரியின் 4 எல்லைகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.