உத்திர பிரதேசம் முகநூல்
இந்தியா

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் உடல்! ஓடும் ரயிலில் இருந்த சூட்கேஸில் சடலமாக கண்டெடுப்பு!

ஜெனிட்டா ரோஸ்லின்

மும்பையை நோக்கி செல்லும் விரைவு ரயில் ஒன்றில் சூட்கேஸ் ஒன்றிலிருந்து தலை துண்டிக்கப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத இளம் பெண்ணின் உடல் கண்டெக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு 11.55 மணி அளவில் மும்பையை நோக்கி சென்று கொண்டிருந்தது ஜன்தா விரைவு ரயில். இந்த ரயிலின் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் உள்ள கழிப்பிடம் ஒன்றின் அருகில் சந்தேகத்திற்கிடமான சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று, இருப்பதை அங்கிருந்த பயணிகள் கண்டுள்ளனர்.

இந்நிலையில், பாலீதீன் பை கொண்டு சுற்றப்பட்டிருந்த அந்த சூட்கேஸின் அடியில் ரத்தமும் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்நிலையில், காலை 7.12 மணி அளவில் ரயிலானது சனார் ரயில்நிலையத்தை அடைந்தநிலையில், அங்கு விரைந்த காவல்துறையினர் அப்பெட்டியை கைப்பற்றி சோதனை செய்ததில், அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அதன் உட்புறம் இருந்துள்ளது. இந்நிலையில், உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதனையடுத்து , இதனை செய்தது யார்? என்று, ரயில் பயணிக்க தொடங்கிய பாட்னாவில் இருந்து சுனார் வரையிலான அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், “ 77 செமீ நீளமுள்ள பாலீதீன் கவரால் சுற்றப்பட்ட பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் யார் என அடையாளம் தெரியாமல் இருக்க, கொலையாளி அவரின் தலையை துண்டித்து பெட்டியில் வைத்துள்ளார். இந்த உடல் கிட்டதட்ட 2-3 நாட்கள் பழையது.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இது போன்ற சூட்கேஸ் கொலை சம்பவங்கள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.