ரத்தன் டாடாவுடன் கோவா நாய் x page
இந்தியா

ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய்| உயிரிழந்ததாகப் பரவிய தகவல்.. மும்பை போலீஸ் சொல்லும் உண்மை என்ன?

Prakash J

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, உடல்நலக் குறைவால் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி உயிரிழந்தார். மகாராஷ்டிர அரசின் சார்பில் அவருக்கு, இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மும்பையில் நடைபெற்றது. ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் 'கோவா'அவரது முகத்தை பார்த்து, நகராமல் நின்றபடி பரிதவித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியது.

இந்த நிலையில், ரத்தன் டாடாவின் வளர்ப்பு நாய் 'கோவா' உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவியது. அந்தச் செய்தியில், ”ரத்தன் டாடா உயிரிழந்து 3 நாட்களுக்குப் பிறகு அவரது வளர்ப்பு நாய் கோவா உயிரிழந்துவிட்டது. மனிதர்களைவிட நாய்கள் தங்கள் எஜமானர்களிடம் விசுவாசம்கொண்டவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்தி வைரலான நிலையில், அதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

ஆனால், இதில் உண்மையில்லை என மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மும்பை காவல் ஆய்வாளர் சுதிர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ”மறைந்த ரத்தன் டாடா ஜியின் செல்ல நாய், கோவா இறந்துவிட்டதாக ஒரு வாட்ஸ்அப் செய்தி பரவி வருகிறது. டாடா ஜியின் நெருங்கிய நண்பராக அறியப்படும் சாந்தனு நாயுடுவிடம் இதை நான் சரிபார்த்து, 'கோவா' நன்றாக இருக்கிறது என்று உறுதி செய்தேன். தயவுசெய்து இடுகைகளைப் பகிர்வதற்கு முன் உண்மைகளைச் சரிபார்க்கவும்” எனத் தெரிவித்துள்ளார்.

நாய் உயிரோடு இருப்பதை அறிந்து பல பயனர்கள் மகிழ்ச்சியடைந்தனர். "இதுபோன்ற பொய்யான செய்திகளைப் பரப்பும் வெட்கமற்றவர்கள்" என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொரு பயனர், ”சிலர் மிகவும் கொடூரமானவர்கள்.. விளம்பரத்திற்காக போலிச் செய்திகளை உருவாக்குவது அவர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது... கோவா நன்றாக இருக்கிறது கடவுளுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: உ.பி மகா கும்பமேளா 2025|இந்துக்கள் அல்லாதோர் உணவகம் அமைக்க ஏபிஏபி-ன் கிளை அமைப்பு எதிர்ப்பு!

செல்லப்பிராணிகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான ரத்தன் டாடா, நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். செல்லப்பிராணிகளுக்காக நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை மும்பையில் நிர்மாணித்தவர். அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன், மறைந்த ரத்தன் டாடா கோவா பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது, தெருநாய் ஒன்று அவரை பின்தொடரத் தொடங்கியது. இதனை கண்ட டாடா, நாயை தத்தெடுத்து மும்பைக்கு அழைத்து வந்தார். ’கோவா’ எனப் பெயரிட்டு, டாடா குழுமத்தின் தலைமை அலுவலகமான பாம்பே ஹவுஸில் அடைக்கலம் கொடுத்து வளர்த்துவந்தார். அந்த நாய்தான் தற்போது இறந்துவிட்டதாக வதந்தியை கிளப்பியுள்ளனர்.

இதையும் படிக்க: வைரலாகும் தனி அந்தரங்க வீடியோ|சோஷியல் மீடியாவின் அநாகரிக முகமும்.. நடிகை ஓவியாவின் கூலான பதில்களும்