வி.பி. சிங் கோப்புப்படம்
இந்தியா

மண்டல் கமிஷன் பரிந்துரை, இடஒதுக்கீட்டின் நாயகன் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம் இன்று!

தமிழ்நாட்டு மக்களின் மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவரான சமூக நீதிக் காவலர் வி.பி. சிங்கின் பிறந்தநாள் இன்று... மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தயதற்காக ஆட்சி அதிகாரத்தை இழந்த தன்னலமற்ற மக்கள் தலைவரைப் பற்றி பார்ப்போம்...

PT WEB

இந்திய அரசியலில் தனித்தன்மை கொண்ட ஆளுமைகளுள் ஒருவர் வி.பி. சிங். இடஒதுக்கீட்டுப் போராளி என்றும் இவரை அழைக்கிறார்கள். ஜவஹர்லால் நேரு காலத்தில் காங்கிரஸில் இணைந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கிய வி.பி. சிங்கின் முழுப் பெயர் விஸ்வநாத் பிரதாப் சிங். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராகவும், இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தலைமையிலான மத்திய அரசில் அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.

போஃபர்ஸ் பீரங்கி ஒப்பந்தம் தொடர்பாக ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததைத் தொடர்ந்து காங்கிரஸில் இருந்து விலகிய அவர், அக்கட்சிக்கு எதிராக நாடு தழுவிய ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கினார். மாநில கட்சிகளை உள்ளடக்கிய தேசிய முன்னணியை தோற்றுவித்து காங்கிரசுக்கு எதிராக மாபெரும் அலையை உருவாக்கி மத்தியில் ஆட்சியை பிடித்த பெருமை இவருக்குண்டு.

எதிரெதிர் துருவங்களான பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சி செய்த வி.பி. சிங், தேசிய அளவிலான அரசியல் கூட்டணிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கும் மண்டல் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்துவதில் முழு உறுதியுடன் இருந்து சாதித்துக்காட்டியவர். சிறந்த பேச்சாளராக திகழ்ந்த வி.பி சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2008ம் ஆண்டு காலமானார்.

கூட்டணி ஆட்சிக்காகவும், இடஒதுக்கீடு தொடர்பான உறுதியான நடவடிக்கைகளுக்காவும் வி.பி.சிங் என்றென்றும் நினைகூரப்படுவார். 11 மாதங்களே மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் தமது செயல்பாடுளால் இன்றளவும் மக்களால் போற்றப்படுகிறார் வி.பி.சிங்