இந்தியா

நோயாளியின் கால்களைக் கட்டிப் போட்டது ஏன்? - மருத்துவமனை மீது எழுந்த புகார்

webteam

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் முதியவர் ஒருவரின் கால்கள் கட்டி சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது

மத்தியப்பிரதேசத்தின் சாஜபூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் 80 வயதான முதியவர் ஒருவர் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவமனையின் கட்டணமான ரூ.11 ஆயிரத்தைக் கட்டத்தவறியதால் முதியவரின் கால்களை மருத்துவமனை நிர்வாகம் கட்டியதாக அந்தப் பெரியவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்துத் தெரிவித்துள்ள முதியவரின் மகள், நாங்கள் ஏற்கனவே ரூ.5ஆயிரம் பணம் செலுத்தியுள்ளோம். ஆனால் மேலும் சில நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மேற்கொண்ட செலுத்த எங்களிடம் பணம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம், முதியவர் எலக்ரோலைட் இம்பேலன்ஸ் காரணமாக வலிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்குக் காயம் ஏற்படாதவாறு கால்களைக் கட்டி வைத்தோம். மேலும் மனிதாபிமான அடிப்படையில் முதியவரின் சிகிச்சை கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதியவரின் கால்கள் கட்டப்பட்ட விவகாரம் மத்தியப்பிரதேச முதல்வர் வரை சென்றுள்ளது. இது குறித்துத் தெரிவித்துள்ள மத்தியப்பிரதேச முதல்வர், சிவராஜ் சிங் சவுகான், முதியவர் விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.