கன்வார் யாத்திரை எக்ஸ் தளம்
இந்தியா

”அரசு ஆதரவு மதவெறி”-உ.பி. கன்வார் யாத்திரை.. வழியில் உள்ள கடைகளில் உரிமையாளர் பெயர்களை எழுத உத்தரவு!

Prakash J

உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த யாத்திரையின்போது சிவபக்தர்கள் கங்கையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாகச் சென்று சிவாலயங்களில் வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கன்வார் யாத்திரை ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 6ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த யாத்திரையின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில், இந்த யாத்திரை செல்லும் வழித்தடங்களில் அசைவ உணவு விற்பனை செய்யப்படுவதை உத்தரப்பிரதேச அரசு கண்காணித்து வருகிறது. இதுதொடர்பாக மாநில அமைச்சர் கபில் தேவ் அகர்வால் அளித்த பேட்டியில், ``முஸ்லிம்கள் இந்து பெயரில் உணவகங்கள் நடத்திக்கொண்டு, அதில் அசைவ உணவுகளை விற்பனை செய்கின்றனர்'' என்று குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் இருக்கும் உணவகங்கள், உணவு வண்டிகளில் உணவக பெயர்ப் பலகையில் அதன் உரிமையாளர் பெயர் இடம் பெறவேண்டும் என்று முஜாபர்பூர் போலீஸார் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸார் அந்த உத்தரவை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

அதே சமயம் இப்போது அதே உத்தரவை முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், ``கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் இருக்கும் உணவகங்கள், சாலையோர தாபாக்கள், உணவு வண்டிகளில் அவற்றின் உரிமையாளர்கள் பெயர் கட்டாயம் இடம் பெறவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதையும் படிக்க: ’என்ன சொல்றீங்க’|ரூ.1,600 கட்டணம்; வலியின்றி உயிர் துறக்க இயந்திரம்.. ஸ்விட்சர்லாந்து கண்டுபிடிப்பு!

”மத நல்லிணக்கத்துக்கு இத்தகைய உத்தரவு, கேடு விளைவிக்கும். மாநிலத்தின் இணக்கமான சூழலை கெடுக்கும்” என முன்னாள் முதல்வர்கள் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மற்றும் ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைஸி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி, ““உத்தரப்பிரதேச காவல்துறையின் உத்தரவின்படி, இப்போது ஒவ்வொரு உணவுக் கடை அல்லது வண்டி உரிமையாளரும் தனது பெயரைப் பலகையில் வைக்க வேண்டும், இதனால் எந்த கன்வாரியாவும் ஒரு முஸ்லிம் கடையில் தவறுதலாக எதையும் வாங்க மாட்டார்கள். இது தென்னாப்பிரிக்காவில் நிறவெறி என்றும் ஹிட்லரின் ஜெர்மனியில் இது 'ஜூடன்பாய்காட்' என்றும் அழைக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”பிறந்தால் ஒருநாள் சாகத்தான் வேண்டும்” - ஹாத்ரஸ் சம்பவம் குறித்து போலே பாபா சர்ச்சை பேச்சு!

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, “இந்த உத்தரவு அரசு ஆதரவளிக்கும் மதவெறி" எனக் குறிப்பிட்டார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ”கடை உரிமையாளரின் பெயர் குடு, முன்னா, சோட்டு அல்லது ஃபேட்டே என்றால் என்ன? இந்தப் பெயர்களில் இருந்து என்ன தெரிந்துகொள்ள முடியும்? இந்த விவகாரத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்து, அரசின் நோக்கங்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதியான சூழ்நிலையையும் நல்லிணக்கத்தையும் கெடுக்கும் நோக்கில் இத்தகைய உத்தரவு ஒரு சமூகக் குற்றம்" என தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

பிரபல பாடலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான ஜாவேத் அக்தர், "குறிப்பிட்ட கடைகள் மற்றும் வீடுகளில் மட்டுமே குறி வைப்பார்கள். எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட மத ஊர்வலம் செல்லும் வழியில் அனைத்து கடை உணவகங்கள் மற்றும் வாகனங்கள்கூட உரிமையாளரின் பெயரை முக்கியமாகவும் தெளிவாகவும் காட்ட வேண்டும் என்று முசாபர்நகர் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது ஏன்? நாஜி ஜெர்மனியில் அவர்கள் குறிப்பிட்ட கடைகள் மற்றும் வீடுகளில் ஒரு அடையாளத்தை மட்டுமே வைத்திருந்தனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: உத்தரகாண்ட்| கோயிலில் டிரம்ஸ் வாசிக்க மறுப்பு: பட்டியலின குடும்பங்களை ஊரைவிட்டே ஒதுக்கிய கொடூரம்!