இந்தியா

கோவாவில் பொது இடங்களில் மது அருந்தினால் அபராதம் !

கோவாவில் பொது இடங்களில் மது அருந்தினால் அபராதம் !

webteam

கோவாவில் பொது இடங்களில் மது அருந்தினாலோ அல்லது பொது இடங்களில் சமைத்தாலோ ரூ.2000 அபராதம் விதிக்கும் புதிய சட்டவிதிக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவின் சுற்றுலாப் பகுதிகளில் முக்கியமான இடம் கோவா. மலைகள், அரபிக்கடல், கோட்டைகள் என கோவா சிறந்த சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது. இந்தியாவில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வருகை தருகின்றனர். கோவாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சாலை விதிகளை சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு பொதுவாக முன் வைக்கப்படுகிறது. அதேபோல் சட்டஒழுங்கு பிரச்னையும் சமீப காலமாக அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து சில முக்கிய கட்டுப்பாடுகளை விதிக்க கோவா அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி பொது இடங்களில் மது அருந்தினாலோ அல்லது பொது இடங்களில் சமைத்தாலோ ரூ.2000 அபராதம் விதிக்கும் புதிய சட்டவிதிக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் இவ்விதிக்கான சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய கோவாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் அகனேக்கர், பொது இடமான கடற்கரையை தங்களின் சொந்த கடற்கரை போல பலரும் பயன்படுத்துகின்றனர். மது அருந்துகின்றனர், பாட்டிலை பொது இடங்களில் உடைக்கின்றனர், வெட்டவெளியில் சமைக்கின்றனர். இவற்றை தடுக்கவே இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது. இனி பொது இடங்களில் சமைக்கவோ, மது அருந்தவோ முடியாது. விதியை மீறுபவர்களுக்கு ரூ.2000 அபராதம் வசூலிக்கப்படும். தவறினால் 3 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கும். ஒரு குழுவாக சட்டத்தை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று, தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மீறுபவர்களில் புகைப்படங்கள் சுற்றுலாத்துறையின் சிறப்பு தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்டு 12 மணி நேரத்துக்குள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.