இந்தியா

சபரிமலை விவகாரம்.. அவகாசம் கோர தேவஸம் போர்டு முடிவு

Rasus

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் அளிக்குமாறு உச்சநீதிமன்றத்தை திருவாங்கூர் தேவஸம் போர்டு அணுக உள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு கடும் எதிர்ப்புகள் தொடரும் நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாக தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் பம்பையில் தெரிவித்தார்.

முன்னதாக மண்டல பூஜை சீசனுக்காக சபரிமலை கோயில் நேற்று திறக்கப்பட்டது. அப்போது கோயிலுக்கு செல்ல வந்த திருப்தி தேசாய் என்ற பெண்ணுரிமை ஆர்வலர் 6 பெண்களுடன் கொச்சி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். ஏராளமானோர் விமான நிலையத்தில் குழுமி நின்று திருப்தி தேசாய் உள்ளிட்ட பெண்களை வெளியேற அனுமதிக்க முடியாது என கோஷமிட்டனர்.

சுமார் 16 மணி நேரம் காத்திருந்தும் போராட்டங்கள் தொடர்ந்ததால் திருப்தி தேசாய் தனது ஊரான புனேவுக்கு திரும்புவதாக அறிவித்து புறப்பட்டுச் சென்றார். எனினும் மீண்டும் சபரிமலை வருவேன் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சபரிமலையில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க முன் எப்போதும் இல்லாத பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.