தீன் தயாள் தீப் உடல் மரியாதையுடன் எடுத்து செல்லும் படம் கூகுள்
இந்தியா

காதல் தம்பதிகளின் விபரீத முடிவு| 'ஒன்றாக தகனம் செய்ய வேண்டும்' என்ற கடைசி ஆசையும் நிறைவேறாத சோகம்!

காதல் திருமணம் செய்துக்கொண்ட தம்பதியர், தங்களின் தனிப்பட்ட குடும்ப பிரச்சனையால் ஒன்றாக தற்கொலை செய்துக்கொண்டு இறந்தனர்.

Jayashree A

காதல் திருமணம் செய்துக்கொண்ட தம்பதியர், தங்களின் தனிப்பட்ட குடும்ப பிரச்சனையால் ஒன்றாக தற்கொலை செய்துக்கொண்டு இறந்தனர். இருப்பினும், ”எங்களை ஒன்றாக தகனம் செய்ய வேண்டும்” என்ற இவர்களின் கடைசி ஆசையும் நிராசையான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டெல்லி காண்ட் நகரில் உள்ள இராணுவ கெஸ்ட் ஹவுஸில் வசித்து வந்தவர் 32 வயதான ஃப்ளைட் லெப்டினண்ட் தீன் தயாள் தீப். இவரது மனைவி கேப்டன் ரேணு தன்வார் (28) இருவரும் இராணுவத்தில் பணி செய்து வந்தவர்கள்.

2022ல் இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். இருப்பினும் இவர்களின் இரு குடும்பத்தினர்களுக்குள் ஒற்றுமையில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது சொந்த ஊரான ராஜஸ்தானில் இருந்த கேப்டன் ரேணு தன்வார், கடந்த 14ம் தேதி, தனது தாய் மற்றும் சகோதரனுடன் தனது கணவரின் டெல்லி இராணுவ கெஸ்ட் ஹவுஸிற்கு வந்துள்ளார்.

மறுநாள் அதாவது 15ம் தேதி கணவன் மனைவி இருவருக்குள்ளும் தனிப்பட்ட பிரச்சனைக் காரணமாக இருவரும் ஒன்றாக தற்கொலை செய்துக்கொண்டு இறந்ததாக கூறப்படுகிறது. இதில் கேப்டன் ரேணு தன்வார் இறக்கும் முன்னதாக தனது கைப்பட எழுதிய குறிப்பில், “எங்கள் இருவரின் தகனமானது, இருவரும் கைகோர்த்த நிலையில் செய்யவேண்டும். இது எனது கடைசி ஆசை” என்று எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனாலும், கேப்டன் ரேணு தன்வார் குடும்பத்தினர், தனது மகளின் கடைசி விருப்பத்தை செய்ய மறுத்து, அவரது உடலை வாங்கிக்கொண்டு தங்களது சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

அதே போல் ஃப்ளைட் லெப்டினண்ட் தீன் தயாள் தீப்பின் உடல் கடந்த வியாழக்கிழமை ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் சுடுகாட்டில் இராணுவ நெறிமுறையுடன் தகனம் செய்யப்பட்டது.

காதல் திருமணம் புரிந்துக்கொண்டு தம்பதிகள் ஒன்றாக வாழ இயலாத நிலையில், இறுதி ஆசையாக இருவரின் உடலையும் ஒன்றாக தகனம் செய்ய விரும்பியும் அவர்களின் குடும்பத்தினரால், அவர்களின் ஆசையானது நிராசையானது. இருவரின் உடலும் 380 கிலோ மீட்டர் தொலைவில் தனித்தனியாக தகனம் செய்யப்பட்டது.

இவர்கள் எதற்காக இறந்தனர் என்ற விவரம் தெரியாத நிலையில், இவர்களின் தற்கொலை குறித்து யாரும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் இவர்களின் தற்கொலைக்கான காரணத்தை போலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.