கெஜ்ரிவால் pt web
இந்தியா

“நாளை பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை செய்யப்படும்”- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Angeshwar G

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் கடந்த திங்கட்கிழமை முதலமைச்சர் கெஜ்ரிவாலின் இல்லத்திற்கு சென்றபோது அவரின் தனி உதவியாளர் பிபவ் குமாரால், தான் கடுமையாக தாக்கப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன்பேரில் கெஜ்ரிவாலின் தனிஉதவியாளர் பிபவ் குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Delhi CM Arvind Kejriwal

மேலும், டெல்லி காவல்துறையினரால் முதல்வரின் இல்லத்தில் இருந்து பிபவ் குமார், விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நாளை மதியம் 12 மணியளவில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தை முற்றுகையிடப்போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஆம் ஆத்மி தலைவர்களுடன் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெறும். நீங்கள் (பாஜக) விரும்புபவர்களை சிறையில் அடையுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவினர் சிறை விளையாட்டு விளையாடுவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார்.

ஸ்வாதி மாலிவால் விவகாரத்திற்கு பின்னணியில் பாஜக இருப்பதாக ஆம் ஆத்மி ஏற்கெனவே குற்றம்சுமத்தியிருந்த நிலையில், இது முதல்வர் கெஜ்ரிவாலைக் குறிவைத்து நடத்தப்பட்ட நாடகம் என்றும் ஆம் ஆத்மி குற்றம்சுமத்தியிருந்தது. முதல்வர் அந்த சமயத்தில் இல்லாததால் பிபவ் குமார் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது எனவும் ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பிபவ் குமார் தனது முன் ஜாமீன் மனுவை திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. அப்போது, பொய் குற்றச்சாட்டுகள் தன்மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும், எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி டெல்லி காவல்துறை தன்னை கைது செய்துள்ளதாக பிபவ் குமார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார். இந்நிலையில்தான் முதல்வரின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.